ஞாயிறு, 9 டிசம்பர், 2007

எச்சரிக்கை மடல்


மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும்,
தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும்
தயவு செய்து மேற்கொண்டு,
இக்கவியின் இரத்த ஓடையை
இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்!

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்
தேசத்து ஆன்மா துடிக்கிறது.
நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது.

உந்தும் வலு உறுதியாக வேண்டும்.
ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம்
வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது.
பனிக்குடம் உடைந்தபின்,
முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால்
எல்லாமே உறைந்து போகும்., ......உலர்ந்தும் போகும்.

வலியின்றி வளர்ச்சி இல்லை.
வலுவின்றி வலியைச் சந்தித்தால்
பலவீனம் பாயில் கிடத்தும்.
வலுவினூடே வலியைச் சந்தித்தால்
நலிவு நாணி ஓடும்.

இருந்து வியாக்கியானம் பேசும் மணித்துளிகள்
வலி வளர்க்கும் வேறொன்றும் செய்யாது.
பந்தமாய் ஆவதற்குப் பலவீனம் வாசலோரம்
முண்டியடித்து நிற்கிறது.
அதை ஊளையிட்டு ஓடவைத்தல் என்பது
உந்தும் வேகத்தில் இருக்கிறது.

உயிர்ப்பின் வலியும், உயிர்ப்பின் ஒலியும்
பிறப்பின் வாசலிலே பின்னி நலிகிறது.
வலியை ஒழிப்பதும், ஒலியை வளர்ப்பதும்
எம் இருப்பின் இயல்பில் இறைத்துக் கிடக்கிறது.

உந்தூ!
இல்லாவிட்டால் மூச்சுத் திணறும்
இத்தனை காலம் எத்தனை இழந்து...
வளர்த்த திரு இது.

முந்நூறு நாள் வளர்ந்த முத்தல்ல,
60 ஆண்டுகளாய் அவதியுறும் வலியில்
தமிழினம் சுமந்த கருவில் வளர்ந்த தெய்வசிசு.

தெய்வ சிசுவின் பிறப்பையே மறுக்கும்
பிசாசுத்தனங்கள் புளுகுக்கதைகள் அல்ல - அவற்றை
நிசத்தில் நாமும் தரிசிக்கும் நிகழ்காலம் இது.

உலகும் வலுவை நோக்கியே தலைவணங்கும் என்பது

வரலாறுகள் உணர்த்தும் பாடம்.
எம் வலிக்கு மருந்து எம்கையில்,
மண்டியிட்டாலும் மாற்றார் எமக்குதவார்.

களமும், புலமும் கைகோர்த்தே...

உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்

வலுவும், வளமும் இணைவதில்
வரலாற்றின் கதவுகள் திறக்கும்.
எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,
உந்தும் வலு உச்சமடையும்.
பிறப்பின் வாசல் விரிவடைய
தெய்வத்திரு கண் விழிக்கும்.

இதற்குப் பின்னும் காலந்தாழ்த்தல்
என்னையும், உன்னையும் இழிவாக்கும்.

புரிவாயா?

ஞாயிறு, 2 டிசம்பர், 2007

கவிதையின் அரசே வாழீ! புதுவைப் புலவனின் அகவை 60


துள்ளிடும் வாலிபத்தால்
துணையற்று வெண்நரையும்,
வில்லிடும் நாவளத்தால்
வேதனை செய்விதியும்,
கள்ளிடும் கவின்பாவால்
காணாமல் போகட்டுமென
தள்ளி நிலம் வாழுகின்ற
தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது.

இருவயது மழலையாக
இதயத்தில் உலவு கவியே!
அறுபது அகவையய்யா
அகத்திலே பதியவில்லை.
ஆண்ட நின் புலமைகென்றால்
ஆயிரம் அகவை தாண்டும்.
பூண்ட மண்கோலத்திற்குள்
புதிர் கூடி நிற்குதய்யா!

தீரப் பெருங்கவியே! தீராத
மாவரம் தந்த துரோணக்குருவே!
ஏறுபோல் நிமிர்ந்த
எழுத்தின் வீரியமே!
கண் நூறு படுமய்யா!
கரிநாச் சொல்லிது.
காலடி மண்ணெடுத்துக்
கற்பூரச் சுடரிலே போட்டிடுக!

கூர்வடிவேலை ஆளும்
சுந்தரப் பேச்சும்,
வேரடி வீரம் ஊறும்
துல்லிய வீச்சும்,
பாரதைப் பணிய வைக்கும்
பைந்தமிழ் பாட்டும்,
ஊரடி உறவை அணைக்கும்
உயிர்ப்பின் ஊற்றும்,
வேரடித் தலைவி காக்க
வாழ்வாங்கு வாழ வாழீ!

மேதகு தலைவன் அருகே
தோள்தரும் ஞானகுருவாய்,
ஈழவள் விலங்கறுக்கும்
காலமது உரைக்கும் திருவாய்,
ஞாலமோடலையும் உறவின்
உணர்வுகள் இணைக்கும் கருவாய்,
வாழக்குடி ஈழம் வரவே
வந்தணைக்கும் அன்பின் செறிவாய்
காலநதி கடந்தும் வாழும்
கவிதையின் அரசே வாழீ!

திங்கள், 26 நவம்பர், 2007

தெய்வீக புருசர்களே!...நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா! துயர் துடைக்க வாருங்களேன்!


கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு
மீட்பர்களே!.....
நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம்.
பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டிபுன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள்.
நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்கஅஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்!
வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே!

காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம்.

கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும்
காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்!
கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத் தெரியவில்லை. எண்ணெடுத்து பார்க்கின்றோம். எத்தனை ஆயிரமர் மண்மடிக்குள் உரமானீர்!

பண்ணெடுத்து பாடிடவும், பருவகாலம்போல் மாவீரர் மலரடிக்கு மலர்தூவி வணங்கிடவும்
இவ் யென்மம் போதாதென இதயப்பூ கசிகிறது.

காலப் பெரு வெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் முகங்காட்டும் முறுவலரே!
ஆரத்தழுவி உங்கள் அன்பு சொல்லிச் சென்றபோதும்
ஊணுருகி, உயிர்கசிய உறுதி மொழிபேச.....
இந்த மாவீரர் கோட்டத்திற்கு மலரோடு வருவோமென்று கூறுகெட்ட மனம் குறிபுணர்ந்து கொள்ளலையே!

அம்மாவிடம் சுகம் சொல்லு!,
அப்பாவிடம் சுகம் சொல்லு!,
அண்ணாவிடம் சுகம் சொல்லு!,
அக்காளிடம் சுகம் சொல்லு!
எத்தனை சுகங்களை எம்மிடையே சொல்லிவிட்டு
கண்மலர்ந்த சிரிப்போடு கந்தகம் சுமந்து சென்றீர்.

வந்திடுவீர், வந்திடுவீர் என்றும்மை எதிர்பார்த்த
அம்மையும், அப்பனும் இன்றிங்கே வந்துளரே!
எழுந்து வந்து பேசய்யா! எழுந்து வந்து பேசம்மா!

தெய்வீக புருசர்களே!...
நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த
அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா!
துயர் துடைக்க வாருங்களேன்!

பால்மாச், சீனி, பனங்கட்டியும், அடிபட்டு உண்ட சொக்லேட் வகையும்,
அம்மா தந்த நிலாச் சோறும்,
அண்ணன் தம்பி உறவின் இறுக்கமும்
மெல்லென விசித்த உற்றார் உறவுகளும்
பாசச்சுழலில் கசிந்து கசிந்து உங்களைத் தேடி இங்கு வந்துளரே!
உன்னத தேவரே!
உங்கள் உறவுக்கொடிகளை அணைத்து தேற்றி ஆறுதல் வார்த்தை ஒருமுறை சொல்லி மறுபடி நீங்கள் உறங்குங்கள்!
கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப்பிடிக்கும் தொட்டாத் தொட்டும்
கொட்டும் மழையில் கப்பல்விட்ட
ஆசைத்தோழரும் இங்குளரே!
பள்ளிக்கூடப் பிரிந்த நட்பும்,
பருவத்தில் காதல் கொண்ட உறவும்
ஊர்பேர் அறியா உவந்த தோழரும் உருகித் தவிக்கிறார் பாருங்கள்!

ஒரு முறை வந்து திருமுகம் காட்டி
உருகும் தோழரின் உளத்தை தேற்றிவருகிறேன்
என்றொரு வார்த்தையைக் கூறி விதைகுழிகுள்ளே ஓய்வெடுங்கள்.

காலப் பெருவெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் வருவீர் என்றொரு நம்பிக்கை சுமந்து நாட்களைக் கடந்து நாம் செல்வோம்.
உருகிய பனியென, உணர்வுகள் அலையிட,
உறங்கும் உமக்கோர் உறுதி தந்தோம்.
எவ்வழி பற்றி எம்மிடை பிரிந்தீர்.
அவ்வழிபற்றி எம்நடை தொடர்வோம்.

சனி, 3 நவம்பர், 2007

தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே!


போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய
புன்னகை மன்னவனே!
தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய
சில்லென்ற நதிக்காற்றே!
ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான
இன்முகத் தமிழெ ழிலே!
பார் சுற்றி தாய் முற்றக் கதைசொல்லிப் பயணித்த
பண்புநிறை தமிழ்செல்வா!

உலகின்............
தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா,
நீ தூங்கிப் போய்விட்டாய்?
ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா,
நீ உறங்கி ஓய்வெடுத்தாய்?
நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா,
நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள்
நாயகனின் தோளான நல்லதொரு தோழனே!
நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்?

யார் குற்றம் செய்தோம்?
விழிநீர் முட்டிக் காயாத விதி வாங்கி உழல்கின்றோம்.
மதி மழுங்கிக் கூர்கெட்டு மனிதத்தின்
மௌனத்தில் உறைத்துக் கிடக்கிறது உலகம்.
சிகிலமாய் உடல் கிழித்து உயிர் குடித்து,
விண்ணேகும் வான்கழுகின் விதிகிழித்த கதைமறந்து,
வேதாளம் எம் மண்ணில் வேட்டைக்குத் திரிகிறது.

வான் கிழிக்கும் வல்கழுகை இனி
வரவிட்டு வீழ்த்தவேண்டும்.
பல்லிளிக்கும் சிங்களத்தின் பலம்
ஆய்ந்து சரிக்கவேண்டும்.
கூன் எங்கு இருக்கிறது
குறிப்பெடுத்துக் கண்டுபிடி!
குன்றாத திடமேற்றுக்
கொற்றவைக்குக் கொடியேற்று!

கண்மூடிக்கிடக்கும் திடல்தோள் தமிழா!
கடல்தாண்டிக் கிடக்கும் உன்
கண்களுக்குள் தீ ஏற்று!
படக்கடைக்கு செய்யென்று முதலீடு கேட்கவில்லை எம்படை களத்தில் முதலாக,
உன் பங்களிப்பைக் கொடு!

எடுகோள்கள் என்று எல்லாவற்றுக்கும்
பழங்கதைகள் சொல்லிப் பஞ்சாங்கம் சிலர் படிப்பர்.
விடு!, வேதனையின் மடி கிடந்து விதியென்று மடிகின்ற வெட்டித்தனமெல்லாம் வெந்தணலில் போட்டு எரி!

வாழ்விற்காய் தினமோடி வாழாமல் வேசமிடும்
வலி உனக்குள் பெருத்து வழி மறைத்து நிற்கிறது.
வையத்தில் பரவி வாழ்கின்ற தமிழினமே!
வாழ்விற்குள் என்ன கண்டாய்?
அல்லலுறும் அகதி வாழ்வு, அகவை பல தேய்ந்தாலும் இணையமுடியா உறவுத் தொடர்கள்,
இறப்புக்குக் கூட உந்தன் வாழ்வில்
இரவல் நிலத்து இறுதிப் பயணம், மிச்சமென்ன?

குந்தி நீ கொண்டாடும் குடிநிலமே, - உன்னை
வந்தேறு குடியென்றே வரைவெழுதி வைக்கும்.

துணி!சொந்தநிலம் மீட்க வேண்டும்.
சோகத்தின் மூச்சுகளில் தேசத்தீ கனலவேண்டும்.
வந்து வணங்கிநின்று வீரப்புதல்வர்கட்கு 'bye' காட்டி, போவதெல்லாம் இந்த மணித்துளியே
இழிவென்று தூக்கி எறி!

எந்த மண்ணிலே இவர் தூக்கம் கொண்டனரோ..,
எந்த மண்ணிலே எழுபரிதி தெரிகிறதோ!
அந்தமண் மீட்க அத்தனையும் நீ வழங்கு!
அப்போதே மறைந்த இம்மாவீரர் மனம் சாந்தி கொள்ளும்.

வெள்ளி, 2 நவம்பர், 2007

போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!



போர் முற்றம் நின்று

பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!

யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்

கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.

கண்களில் கசிகின்றோம்.

காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்

கனலாய் பிறப்பெடுப்போம்.




பிரிகேட் சுப.தமிழ்ச் செல்வனுடன் மாவீரர்களான சகபோராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.

புதன், 24 அக்டோபர், 2007

புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி


காலப் பெரு வெளியில் - ஈழக்
கதை எழுதும் இளைய தேவரீரே!

தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை
தரணிக்கு விட்டுச்சென்ற தமிழ்மானப் புதல்வர்களே!

வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு
உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே!

கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும்,
இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும்
சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும்.

நீங்கள்
இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும்,
இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது.

வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து,
விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர்.

இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங்களச் செழுங்கவியும் - உம் சிறப்பெடுத்துப் பாட, அவர் சந்ததிக்கும் காப்புத் தந்து, சாவணைத்துப் போனீர்கள்.

விலைபோகாத் திருமகனின் வீரப்புதல்வர்களே!
வான் கிழிக்கும் வல்லரக்கர் வடிவுடைத்துப் போட்டு,
மனக்கூன் நிமிர்த்தி, மறவேங்கை மௌனம் கலைத்து,
வலுவூட்டி வளியானீர்! வரலாற்றுத் திருவானீர்!

இனி
இதுகாலம் பிணங்குவித்த இயந்திரக் கழுகுபல
இடிந்துதிர்ந்த ஒலி, உலகின் கேளாச்செவிகளுக்கு கேட்டதென்று ஓலை வரும்

கையெடுத்துக் குலுக்கியும், கனிமுகம் காட்டியும்,
எழுதீயின் கனம் தணிக்க கட்டாயம் பலர் வருவர்.

கலிமீது கலிதூவி தமிழர் வாழ்வெங்கும் வலிதூவும் வல்லபல அரசுகளும் வாசலிலே வந்திளிக்கும்.

அரங்கிற்கு மறைவாக ஆயதவளங் கொடுத்தோரும் - தம் சிரங்கு முகம் மறைத்து சிறப்பாய்வு செய்ய வருவர்.

புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி - இது
பொல்லாத இனவாதம் பொறி கலங்கும் முதற்படி.

இதயத்தின் மத்தியிலே இடிவிழுந்து கிடக்கும் இலங்கைக்கு இனித்தான் முடிவுரை.
இதுவே சுதந்திர ஈழத்தின் முகவுரை.

வியாழன், 27 செப்டம்பர், 2007

சாத்வீகச் சின்னம்


கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று செய்தவன்
செத்து நின்ற இந்தியத்தை
முத்தமிட்டு நின்றவன்
பித்தம் கொண்ட வல்லரசைப்
பேதலிக்க வைத்தவன்
கத்தும் கடல் சூழ்ந்திருந்த
காசினியில் உதித்தவன்

வேலவனின் காலடியில் - தமிழ்
வேதனைகள் சொன்னவன்
காலனையும் இங்கிருத்திக்
கதைகள் பல கேட்டவன்
ஞாலமிங்கு தலைகுனியும்
கோலமதில் வென்றவன்
காலமது பார்த்துத் தன்
காரியத்தைச் செய்தவன்

வேங்கையரின் பாதையிலே இவன்
வெகுண்டெழுந்த சன்னம் - இன
வேதனையைத் தான் சுமந்த
சாத்வீகச் சின்னம்
காந்தியவர் மண்டியிடும்
காவியம் இவன் திண்ணம்
காய்ந்த இவன் நா உதிர்த்த
வார்த்தை இனி மின்னும்.

வியாழன், 17 மே, 2007

சாலக்கட்டமைப்பின் சீர்வலு


புலத்திடை உறவெனும்
வலிமையைக் காத்தவன்.
களத்திடை ஆடியே காய்த்து உரம்பெற்றவன்
புலத்திடை வந்து புத்துணர்வு ஊட்டியோன்
கலையெனும் அழகுடன் கதிரொளி வீசியோன்
காலனைப் பற்றிக் கரைந்தது எப்படி?
மாதம் ஒன்று மந்தமாய் ஆனது.

பாதைகள் வகுத்தவன் பயணப்பட்டது – எம்
காதடியில் இன்னும் கனத்துக் கிடக்கிறது.
ஆளுமை கொண்ட அறிவொளி மைந்தனே!
நீள நெடும் பயணம் நிறைவுகாணும் வேளையிலே
காலக்கரை பற்றி கண்மறைந்து போனதென்ன?
ஆழச் சுழியோடி அகிலத்தின் திசையெங்கும்

சீலப் பணியாற்றி சிந்தைகளை வென்றவனே!
பாலமிட்டுப் பற்பலரை பக்குவமாய்ப் பண்படுத்தி
சாலக்கட்டமைப்பில் சீர்வலுவாய் சேர்த்தவனே!- உனை
ஓலமிட்டு ஒளி சிதறும் கந்தகக் காவாலி
மாளவைத்த கதை மறையாமல் உயிர்க்கிறது.
கலையழகா!,

வீணாகப் போனவன் வந்துன்னை
விரைந்து அள்ளிப் போய்விட்டான்.
காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களென
எதிர்காலம் அறியாமல் ஏதேதோ பேசினோமே..
காலன் வந்துன்னைக் கடத்திப் போனானே
நான் இப்போது கட்புலன் அறியாக்
காற்றுக்குள் உனைத் தேடுகிறேன்.
காலனை ஒரு முறை என்

கண்ணெதிரே அழைத்துவா!
அவன் குரல்வளையைக் கடித்து
கோமாவில் போட குமுறுகிறது
என்னுள் மாபெரும் ஆத்திரம்.
அகிலத்தின் புரையான
ஆணவஅரசெல்லாம் எம்
அன்னையவள் ஈழமண்ணை
அலங்கோலப் படுத்துகையில்
உலகெலாம் பரவிய உறவுக் கொடிகளை
திரட்யெடுத்து திண்மையூட்டிய
உன்னையவன் பறித்தது
உலக மகா பாதகம்.
“கவிஞர்கள் மகாப் பொல்லாதவர்களோ?”

எக்கருத்தால் என்னிடத்தில்
இக்கணை தொடுத்தாய் அறிகிலேன்.
பொல்லாத்தன்மை கூடப்பிறப்பெடுத்து
வருவதில்லை வாழ்வுரிமை மறுக்கப்படும்
வல்லூறுகளுக்கு மத்தியிலே
வலிப்பட்டு, வதைபட்டு வாழும் எச்சீவனும்
பொல்லா முகம் கொண்ட
போர்ப்புலியாய் மாறும் என
இன்றில்லா உந்தனுக்கா புரியாது?
விழவிழ எழுகின்ற வேதத்திற்கு உரியவனே,

வெல்லும் தமிழீழத் தாகத்தை உடையோனே,
காற்றிலாடும் விழுதனைத்தும்
வேர்மடியில் பிணைத்ததுடன்
ஆற்றியது போதுமென்றா
கூற்றுவன் பின் சென்றாய்?
மாற்றமது கூறும் காலக்கருவாகி
மண்மீட்பில் புலம்பெயர்வேர்களின்
பலம் ஏற்றி பயணிக்கத் தூண்டி,
ஓய்வின்றி மீதி வழிபயணிக்கும்
பாதை காட்டி சென்றவனே,
ஓயமாட்டோம் - இனி எவ்
இன்னல் வரினும் சாயமாட்டோம்.
மாயமான் எம்மிடையே மருண்டோடும் காலமிது.
தாயக மடிசாய்ந்த தளராத தோழனே!
ஓய்வெடுத்து நீ உறங்கு.
உன் உறுதி எங்களிடம் உயிர்க்கும்.


ஞாயிறு, 11 மார்ச், 2007

இலக்கணம் தேடாதீர்கள்.....என்னிடம் கிடைக்காது மனதில் எழுவது உணர்வுகளால் வார்த்தைகள் பின்ன உராயம் எழுதுகோலின் பிரசவம் இது.அந்த வகையில்....




வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



ஆற்றலுடை தொழில் வளமும்,

அறிவியல் துறை வளர்வும்,

மாற்றமுறாப் பண்பு நிறை

மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும்,

ஏற்றமுடன் தமை ஈந்த

சரித்திரத்து நாயகரை

சாற்றிவைத்து கூற்றியம்பச்

சத்தான புலமை செய்தும்,



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



காடுகளும், கழனிகளும்

கலை கொழிக்கும் கூத்துகளும்,

களங்கள் பல கண்ட – வீரக்

கதைகள் சொல்லும் ஆவணமும்,

வேழமொத்த பகை விரட்ட

வெகுண்டெழுந்த வேங்கையமும்,

வீரமுடன் பாடிப் பாடி

வெற்றி வாகை சூடியே



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



தென்னைபனை கனிவளமும்,

தேங்கு முப்பதன் செறிவும்,

கண்ணையொத்த கடற்தனமும்,

காயமாற்றும் செடி கொடியும்,

தொன்மையுறு தமிழ்மொழியும்,

தோற்ற எழில் மணல் வெளியும்,

முன்னர் ஆட்சி செய்த சான்றும்

முரசறைந்து செப்பியே



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



இலங்கு துறை கோணமலை,

எழில் கொஞ்சும் மட்டுநகர்,

முத்துபுகழ் மன்னாரும்,

முகங்காட்டும் தீவேழும்,

தலையசைக்கும் யாழ்குடாவும்,

தளத்தைக் கொண்ட வன்னிமண்ணும்,

அழகை அள்ளிச் சொரியச்சொரிய

அம்பாறைத் தங்கத் தளமும்



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க! தமிழ் ஈழமே!

வாழ்க! என்றும் வாழ்கவே!



பேதமின்றி, பிரிவுமின்றி – ஓர்அன்னை

பெற்ற பிள்ளைபோல்

மும்மதத்தார் இணைந்து வாழும்

இன்ப பூமி ஈழமே!

ஆதவனாய் எழுந்த தமிழ்

ஆளும் திரு நாடிது

அணிவகுத்துத் தலைவணங்கி

எழுக! எழுக தமிழரே!



வாழ்க! நீடு வாழ்கவே!

வையம் போற்ற வாழ்கவே!

வாழ்க தமிழ் ஈழமே!

வாழ்க என்றும் வாழ்கவே!

திங்கள், 26 பிப்ரவரி, 2007

இருப்பினும் நம்பினோம்!

இந்திய தேசமே இனியும் எம்மினம் உன்னில் பற்று வைப்பது எப்படி? அமைதிப்படை தந்த ஆறாத வடுக்கள் இன்னும் எங்கள் தேகத்திலும், துயரமாய் இதயத்திலும்…… இருப்பினும் நம்பினோம்! தமிழகத்து உறவுகளின் ஆளுமை….., பாரத தேசத்தை ஈழத்தின் திசையில் நேசக்கரம் நீட்ட வைக்குமென்ற எங்கள் நம்பிக்கை காலங்காலமாக இடிக்கப்படுகிறதே. போரின் வலி சுமந்த எங்களுக்குப் போதையூறும் வசனம் பேசத் தெரியாது. பரம்பரைக் குடி நிலங்களைப் பறிக்கும் சிங்களத்தின் கொடுஞ்செயலால் - இன்று சொந்த நிலத்திலும் உலகெங்கிலும் அகதிகளாக அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கான அத்தனையும் தொலைய அவலப்படுகிறோம். உதவி செய்ய வேண்டாம். எதிரியை ஊக்குவித்து எங்கள் உறுதியை உரசிப் பார்க்க வேண்டாம். உறவுக்கார நிலமென்ற உணர்வு வலிக்கிறது.
தென்னகத்து சினிமா நாயகர்களே! உங்களை ரசித்தோம் வளர்த்தோம். அநீதிக்கு எதிரான உங்களின் ஹீரோத்தனங்களுக்கு உள்ளங்களை பரிசளித்தோம். என்ன?, நீங்களெல்லாம் கோல விளக்கொளியில் கோலோச்சும் பொய்முகங்கள் என்று சிந்திக்க மறந்து விட்டோம்.
உறவுகளுக்குக் கரங் கொடுக்கும் தமிழகத்து உன்னத உள்ளங்களே! உங்களுக்குத் தலை வணங்குகிறோம்.செகிடன் காதிலூதிய சங்கின் நிலை உங்களுக்கு புரிந்து கொண்டுள்ளோம். புலரும் திசைநோக்கி நடக்கின்றோம். இருள் நிறைந்த எங்கள் பயணிப்பில் உங்களின் குரல் எங்களின் காதுகளுக்கு அண்மையில் கேட்கும் பொழுதுகளில் ஆசுவாசப்படுகிறோம்.
தொடரும் எங்கள் தாயக மீட்பில் இருப்பவர் யார் ? இறப்பவர் யார்? என்பது தெரியாது…… அநீதியான ஆதிக்கப் போருக்கு எதிராக முகங்கொடுக்கும் முகப்பில் நிற்கிறோம். சர்வதேசச் சூதாட்டம். எங்கள் மண்ணைக் குதற நேரங்குறித்து நகர்கிறது. வாழ்வோம் என்றாலும், வீழ்வோம் என்றானாலும் தாயகத்தின் மண்ணிற்கு உரமாகி வாழ்வோம். புலம் பெயர்ந்தோர் என்றாலும் தாயகச் சூடு தணியா கனலாவோம்.
தமிழக உறவுகளே!தாய்மானம் காக்க நாங்கள் போரிடுகிறோம்.தமிழ் மானம் காக்க நீங்கள் தோள் கொடுங்கள்!

சனி, 3 பிப்ரவரி, 2007

பெண் என்னும் பூகம்பம்












துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.
போராளியான பெண் ஆணுக்கு நிகராக

அனைத்திலும் மிளிர்கிறாள்.
அல்லாதவள்...அன்றாட அல்லல் மீள
அல்லும்,பகலும் அவதியுறுகிறாள்.
புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள்
பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம்
சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும்
புதையுண்டு கிடக்கிறோமே.....
வேண்டாமென்று சொல்லவில்லை
வீறு கொண்டெழுந்து.....வேகும் விதியோடு
வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள்
கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே.
அன்னையமும் அதை மேவும் பெண்ணியமும்

காலச்சுழிக்குள்ளே காணாமல் போனதுவோ?
வங்காலைச் சிறுபெண்ணின்

வலி நிறைந்த கொலை அறிந்தும்
கண் காணா நிலையென்றா கனல் எடுக்க மறந்தோம்?
செந்தாழம் சிதைந்தாற்போல் சிறு தேகம் கிடந்தநிலை
செவ்விழிகள் மொய்த்து எங்கள் சிந்தைக்குள் புகவில்லையா?
பெண்ணியம் பேசி பெருமைகளைக் குவிப்போரே!

கண்ணிய வாழ்வுக்கேங்கும்
ஈழப்பெண் கண்ணீரைக் களமேற்றும்!
கண்ணென்றும், கனியென்றும் கவி கொஞ்சில் கொதிப்போரே!
பெண்களைக்.....காடை அங்கே கசக்குகிறான்.
காணாமல் கிடப்பது ஏன்?
அல்லைப் பிட்டிக்காய் அழுத கண்ணீர் காயவில்லை

ஆயிரம் அமைப்பிருந்தும் ஐ.நாவின் அம்பலத்தில் ஏறவில்லை
வங்காலை தொடர்கதையாய் வலியின் வரவெழுதி
எங்கால அடுத்த இடியென இதயத்தில் வலித்திருக்க
சொல்லி வைத்தாற்போல வல்லிபுன முன்றலிலே
வானரக்கர் குண்டு போட்டர்.எண் எட்டின் பெருக்கத்தை
எமன் தின்று சென்றான்.கண்ணுற்றும்,
காற்றுவழி சேதி கேட்டும்
எண்ணிக்கையற்று எரிமலையாய் எழுந்தோம்...பின் என்ன?
ஓர் மாதம் கடக்கு முன்னே மல்லாக்கப் படுத்துவிட்டோம்.
அன்றங்கு பட்ட அடி இன்றும்
புற்றெடுத்து புரையோடிக்கிடக்கிறது.
மருத்துவப் பெயராலே சிங்களத்தின் மரணப்பரிசுபெற்ற
சின்னப் பெண்ணுடல் சிதையேற்ற முடியாமல்
சீரழிந்து அலைகிறது.
ஆதிக்கக் கூப்பாடு அணுதினமும் ரணமாடி
அன்னையர் விழியேறிகண்ணீர்க் கடல் தோண்டுகையில்
பன்னீர்க்குளியலிட்டு பைந்தமிழ்க் கன்னியர்கள்
பக்குவமாய் உள்ளரென பாரெங்கும் பறையறைந்து
சங்கரி முதற்கொண்டு எட்டப்பச் சண்டாளர் சாட்சி சொல்வர்
நாங்களும் கேட்போம், திகைப்போம்...
பொய் என்று பொருமுவோம்.
பிறகொன்றும் செய்யமாட்டோம்.
மூலைக்குள் முடங்கி முகட்டு விட்டம் பார்ப்போம்
காலங்காலமாக இதுதானே நடக்கிறது.
நாளாந்த நகை மாற்றம். அலங்காரப் பொருட் தேட்டம்

தாயகத்தை விலத்திய தாயகமாய் உலவுகிறோம்.
கார்காலப் பொழுதுகளில் கன்னச் சிவப்பெழுதி
போர் மூண்ட பூமியின் பெருந்துயர்
மாற்றவெண்ணா.....மாதராய்முல்லைச் சிரிப்போடு
மிடுக்கோடு நடக்கிறோம்.
அக்கையும், தங்கையும் பக்கத்து வீட்டுப் படித்த தோழியும்
சீண்டும் பகை நடுவே.....
மானத்தை வேண்டி தினம்தினம் தீக்குளிக்கும் பொழுதுகளில்
வரு.....மானத்தைத் தருமென்றாலே
அதைப்பற்றிப் பேசுகிறோம்.
வாதையுற்ற இராணுவ வல்லுறவால் சீவன்விட்ட,

வலியுற்று மனம் நலிந்த பேதையான பெண்களுக்காய்
கோதையர்கள் தனியெழுந்து மேதினியை உலுக்கினோமா?
முக்காடு போட்டுக் கொண்டு பெண் என்னும்
முகம் தொலைத்து முடங்கி விட்டோம்.
துணிவிருந்தால் துயர் அகலும்.

எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.

வெள்ளி, 26 ஜனவரி, 2007

மானுடம் என்பது...



மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்ற வகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மூதாதையர் பூமியில், இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு, ஆயுத முனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் பூமித் திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்?
மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப் புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கைகுலுக்குகிறார்களே! மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?அல்லது புலம்பெயர்ந்து வாழும் எம்மினத்தின் தாயகப்பற்று பலவீனமாகி விட்டதா?
கந்தகம் விற்கும் கனவான் தேசங்களுக்கு கருகி சிதையும் எங்கள் இனத்தின் வலிதெரிய நியாயமில்லை. பேரம் பேசி விற்கும் ஆயுதவளங்கள் எங்கள் மண்ணில் நிறைக்கப்போகும் பிணக்குவியல்களைப்பற்றி விற்பனையாளர் அறிய ஆர்வப்படவா போகிறார்கள்?

இயற்கை எழில்கொஞ்சும் எங்கள் பூமியின் மரஞ்செடியெல்லாம் பரட்டையாக மெல்ல மெல்ல உயிர்ப்பைத் தொலைத்துக் கொண்டிருப்பது பற்றி….. எங்கள் தேசத்தின் மண்ணினை ஆய்வு செய்தால்..... அது தன்னுள் கலந்திருக்கும் கந்தக அமிலத்தின் கனதியைச் சொல்லுமென்பது எனக்கும், உனக்கும் மட்டும் தெரிந்தால் போதுமா?எப்போது உலகப்பரப்புகளில் சிங்கள இனவாதிகளுக்கு ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் கொடுக்காது நிறுத்தக்கோரி கிளர்ந்தெழப் போகிறோம்?
வடக்கிலும், கிழக்கிலும் தமிழினத்தின் மேல் போரையும், பொருளாதாரத் தடையையும் விதித்து சிறுகச் சிறுக எம்மினத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கும் இதேவேளை மற்றைய பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் களியாட்டங்களில் உண்மைகளை மூடிமறைத்து வேசம் போட்டு விவேகமாக வெளியுலகை நோக்கும் இலங்கை அரசின் முகமூடியை எப்போது கிழித்தெறியப் போகிறோம்?அரச பயங்கரவாதம் நிறைந்த நாட்டிடையே பெரும்பெரும் முதலீடுகளை செய்து எம்மினத்தின் அழிவுக்கு ஆதரவுத்தோள் கொடுக்கும் உண்மைநிலை புரியா அந்நிய அப்பாவித்தனங்களுக்கு எப்படிப் புரியவைத்து எம்மினத்தை பாதுகாக்கப் போகிறோம்?
பட்டிக்குள் அடைபட்ட மந்தைகளைப்போல் யாழ்குடாநாட்டிற்குள்ளும், வாகரைப் பிரதேசத்தினுள்ளும் மக்கள் அவலப்படும் இன்றையகாலங்கள் எப்படி உலகத்தின் கண்களுக்குத் தெரியாமல் போகிறதோ? உண்ண உணவின்றி ஒரு பிடி அரிசிகூட பெற வழியின்றி நஞ்சை உண்டு உயிரை மாய்த்த குடும்பம் உனக்கும், எனக்கும் சொன்னது என்ன? ஊர்ப்புதினமா?உக்கிரமான இராணுவ வக்கிரத்தின் மத்தியில் புசிக்க ஒருவாய் ஊணின்றி ஒட்டி உலர்ந்து சாவதைக் காட்டிலும் விசத்தை உண்டு உயிரை மாய்ப்பது விவேகம் என்பதையா? இது எதை உணர்த்துகிறது? புலம்பெயர் உறவுகளான எங்கள் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையை அல்லவா.. குறிப்பெடுத்துக் காட்டுகிறது.
களத்தில் நின்று எங்களைக்காக்க வீர்ப்புதல்வர்களும், “அதே சமயம் வெளிப்புலத்திருந்து எங்களைக் காக்க எங்களின் விடியலுக்காய் ஒவ்வொரு தேசத்தின் மனக்கதவங்களையும் திறந்து எங்கள் தேசத்தில் எங்களுடைய வாழ்வுக்கான அங்கிகாரத்தை வழங்கச் சொல்லி சிங்களத்தின் செருக்கடக்குவீர்கள் நீங்கள் உள்ளீர்கள்! நீங்கள் உள்ளீர்கள்!”
என்ற எம்மினத்தின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து விட்டோமா?
நீயும், நானும் நேற்றைய இரணங்களை மறந்துவிட்டோமா? கல்வியைப் பறிகொடுத்தோம், கட்டிளம் பருவத்தில் இராணுவக்கரங்களில் சிதைவுற்றோம், உறவுகள், அயலவர், கண்ணெதிரே துடித்திறந்த காட்சியெல்லாம் காலாவதியாகி நினைவு பதிவிலிருந்து காணாமல் போய்விட்டதா? ஷெல் தந்த தழும்புகளையும், குருதிச் சுற்றோட்டத்தில் குலவித்திரியும் கந்தகத் துகளையும் காலம் மறக்கடித்து விட்டதா? அல்லது புலம்பெயர் வாழ்வியல் தந்த சுகம் இருட்டுக்குள் தள்ளிவிட்டதா?
பட்டியில் அடைபட்ட விலங்குகளுக்குக் கூட உணவு போடுவார்கள் ஆனால்… எங்களினத்திற்கு?
இராணுவக் குண்டர்களுக்கு மத்தியில் அவர்களைக் காக்கும் கேடயமாக மாற்றப்பட்டிருக்கும் மக்களுக்கே உணவைத் தடை செய்யும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களை நானும் நீயுமாவது புறக்கணிக்கலாம் அல்லவா!எங்களின் இருப்பை, எங்களின் உறவுகளுக்கும், இந்த உலகத்திற்கும் உறுதிப்படுத்த வேண்டிய காலத்தில் நானும் நீயும் பயணிக்கிறோம். எங்களின் இருப்பு என்பது ஒருநாள் எழுச்சியல்ல… பெரும் தொடருந்தாய் நானும் நீயும் நகரவேண்டும். அடுத்தடுத்து சிறிலங்காவின் உற்பத்திப்பொருட்களுக்கும், உல்லாசப் பயணத்துறைக்கும், பாரிய முதலீடுகளுக்கும் தடைகளை உருவாக்கும் அதே நேரத்தில் இலங்கை வங்கிகளில் கிடக்கும் தமிழரின் பெரும் சேமிப்புப் பணங்களையும் மீளப்பெற்றும், சிறிலங்காவிற்கு பெரும்வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் எயர்லங்கா விமான சேவைகளைத் தவிர்ப்பதாலும் உலகளாவிய ரீதியில் சிங்கள அரசுக்கு தமிழர்களாகிய எங்களால் பாரிய தடையை உருவாக்கமுடியும். அதற்கான முன்னெடுப்பை நானும் நீயும்தான் உருவாக்க வேண்டும். எங்களின் இந்த செயற்பாட்டின் மூலம் புலம்பெயர் தமிழரின் விடுதலை வேட்கையின் கனதியை சிங்கள இனவாதம் மட்டுமல்ல எங்களின் அவலங்களை கணக்கெடுக்காமல் ஆயுதவளங்களை அள்ளி சிங்களத்திற்கு வழங்கும் அண்டை நாடுகளோடு அனைவருக்கும் ஈழத்தமிழினம் புரியவைக்க வேண்டும்.
என்ன… என்னினத்தின் விடியலின் ஒளிதேடி நான் இறங்கிவிட்டேன். நீ…… இன்னும் உறங்குகிறாயா?.... இல்லை உணர்வற்று எம்மினத்தை அழிக்கும் அரசுக்குச் சாமரம் வீசுகிறாயா? வா!..... என் பதில்போல் உன்பதிலும் தாயகமண்ணுக்கு தலைநிமிர்வைக் கொடுக்கட்டும்.

புதன், 24 ஜனவரி, 2007

செய்! செருக்கை மற!!

செய்! செருக்கை மற!!
செய்! அல்லாவிடின் செத்துமடி!!
இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக்களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும், மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்துபிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? எங்களை நோக்கி இக்கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் பூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் கோரப்பிடிக்குள் தந்திரமாகத் திணித்து, தங்கள் காலடியில் போட்டுமிதிக்கலாம் என்று கனவு காணுகிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் பொருளாதாரம் தடையாக இருக்கிறதென உலகமெல்லாம் கையேந்தி, தம் தரப்பை வலுப்படுத்தி, இன்னும் எம்மை நலியவைத்து நாடாள நினைக்கிறது. போர் உப கரணங்களாலும், இராணுவ அணிகளாலும் கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளைகளை அறிந்திருந்தும் சுதந்திரகாலம் பற்றிய சுகமான கனவுகளோடு புலம்பெயர் நாடுகளில் அமுக்கவேளைகளை அமைதி நாட்களாக காட்சிப்படுத்திய மாயவலைக்குள் மயக்கத்தில் கிடந்து, இப்போது இடியோசை கேட்டு நடுங்கிப் பேதலித்து நாளைநோக்கி நகரும் திராணியற்று விக்கித்து நிற்பதால் ஏதும் மாறிவிடப் போவதில்லை. வன்னிப் பெருநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரச கட்டமைப்பு, தமிழீழம் எங்கும் விரிவுபடுத்தி நிலைப்படுத்தக்கூடிய உடல், உள வளங்கள் தமிழீழ மக்களிடம் நிறையவே இருக்கிறது. ஆனால் பொருளாதார வளம் அவர்களை ஏளனப்படுத்தி நகைக்கிறது. உதவுவதற்கு யாருமில்லாத இத்தகைய காலப்பகுதியில் புலம் பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக நான் என்றும், எனது ராசாங்கம் என்றும் தங்களுக்காக தனியே ஒரு குழு என்ற சிறு வட்டத்திற்குள் தத்தம் விவேகங்களைத் தொலைத்து விட்டு திணறிக் கொண்டிருக்கிறார்கள். "என்னை முன்நிறுத்தி மதிப்புத் தா! எல்லாம் செய்கிறேன்." என்பது போன்ற எண்ணங்களும், வாதங்களும் இன்றைய காலகட்டத்தில் வேண்டாதவை. நான், நீ எவருமே பெரிதல்ல, நாம் என்ற எங்கள் இணைப்புத்தான் பெரியது. தாயகத்தை மனதில் பூசிக்கிற எவருமே தனக்கு என்ற குறுகிய வட்டத்திற்குள் நிற்கமாட்டார்கள். பெற்றவள் புண்பட்டு இற்றுக்கொண்டிருக்க உற்றிருக்கும் பிள்ளைகட்குள் பேதங்கள் எழாது. பாசத்துடிப்பு கைகளை இணைத்து அன்னையைக் காக்கும் வலிமையாய் மாறும். செய்! பின்னர் செய்தேன், செய்தேனென்று செருக்கடையாதே! இன்னும் நீ செய்ய வேண்டியவை அளப்பெரியன. தேசத்தின் தேவை விசாலமானது. ஒருவரால், இருவரால் பூர்த்திசெய்யக்கூடியதல்ல. எல்லோரும் இணைந்து நிரவவேண்டிய பள்ளம். எனக்கும், உனக்கும் போட்டி என்பதை இன்றோடு விட்டுவிடுவோம். நான் உனக்கும், நீ எனக்கும் தோழர்கள் ஆவோம். இறுக இணைக்கும் எங்கள் கரங்களால் தேசத்திற்கு வலிமை சேர்ப்போம்.
செய்! செருக்கை மற!! இதை உனக்கும் எனக்கும் உரிய வேதமாக மாற்றுவோம்!

நில்!
நீயும், நானும் குறுகிய வட்டத்திற்குள் மறுபடியுமா? புரியவில்லையா?

செய்! செருக்கை மற!
இது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் வேதமாகட்டும்.

செவ்வாய், 23 ஜனவரி, 2007

மர்ம மயானம்.

எங்கள் எட்டுப்பேர்களுக்குள்ளும் இன்னும் கருத்தாடல்களும், கலக்கங்களும், கடந்த கால ஏக்கங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருந்தன. அந்த வேர் முட்டிய இலுப்பை மரம் நூற்றாண்டு தாண்டிய முதிர்ச்சியுற்றிருந்தாலும் அந்தக் கானல் பிரதேசத்தில் வேரூன்றிய காரணத்தால் வளர்ச்சியில் செழுமை குன்றி குற்றவாளியைப்போல் குறுகி நின்றது. அதன் அடிப்பரப்பு வேர்த்திட்டுக்களில் அமர்ந்தபடி அலறலாய் வெளிவந்த எங்கள் புலம்பல்களை இந்த மரம் எத்தனையோ தடவைகள் கேட்டாயிற்று. இருந்தாலும் மனதிற்குள் வெம்பியபடி இன்னும் மௌனமாகவே நிற்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஏய் மரமே! உனக்குக் கூடவா எங்களைத் தெரியவில்லை?....... எத்தனைபேர் இவ்வழியால் வருகிறார்கள், போகிறார்கள். எங்கள் இருப்பை அவதானிக்க அவகாசம் இல்லாது அவரவர் அவசரம் அவரவருக்கு…. எண்ணங்களுக்குள் அலைமோதியபடி அந்தச் சாலையோரம் என் அவதானிப்புக்கள்…
தூரத்தில் ஏதோ பொருட்கள் சுமந்தபடி ஒரு மாட்டுவண்டி!காளை மாடுகளின் வாய்களின் ஓரங்களில் நுரை கக்கியபடி அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஒலி லயத்திற்கு ஏற்றபடி அவை நடைபோட்டு வந்து கொண்டிருந்தன. கானல் வெயிலில் கண்களைக் கூசியபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கிழவனின் கண்களில் ஒரு மலர்ச்சி. எனக்குத் தெரியும் இந்த இலுப்பைமர நிழல் அவனை வசீகரித்து விட்டது. நிட்சயம் அவன் இந்த நிழலில் இளைப்பாறுவான். எனக்குள் மின்னல் வெட்டியது. எப்படியும் கிழவனை நம்பக்கம் ஈர்க்க வேண்டும். சுற்றவர என்னைப் புரிந்து கொண்ட வேகத்தில் எண்திசைக்கும் பார்வைகள் படர்ந்தன. அதோ கிழவன் அண்மித்துவிட்டான். இலுப்பையடியில் எங்களைப் பார்த்ததும் காளைகள் இரண்டும் கண்களில் மிரட்சியுற்றன. லயத்தோடு நடையிட்ட அவற்றின் கால்கள் நிலை தடுமாறின. கிழவனின் கையில் இருந்த மூக்கணாங்கயிறு வலிகொடுக்கக் காளைகள் ஒடுங்கின. இலுப்பை வேரடியில்… இதோ கிழவன் இறங்கி விட்டான். நாங்கள் துணிந்து அவனருகே சென்று சுற்றிவர நின்றோம். அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தானே தவிர, எங்களைக் கவனிக்கவேயில்லை. மதிய வெயிலின் ஒருவித நிசப்தம் அவனை பாதித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் காளை மாடுகள் மட்டும் மருட்சியோடு எங்களைப்பார்த்துத் தீனமாக நலிவோடு அழுதன. அது கிழவனுக்கு எரிச்சலை ஊட்டியிருக்கவேணும் “த்தா…! சும்மாயிரு!!” என்று அதட்டிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டான். “விசுக்” கென்று அந்தப்புதர்பக்கமிருந்து வெளவால் ஒன்று கிறீச்சிட்டுப் பறந்தது. திடுக்கிட்ட கிழவன் பார்வையை அந்தப்பக்கம் திருப்பினான். ஏதேச்சையாக எதையோ…….. எதையோ மிக உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான். எங்களுக்குள் மலர்ச்சி….. அமைதியாக இலுப்பை வேர் முட்டியில் கிழவனைப்பார்த்தபடி அமர்ந்தோம். கிழவன் கண்ணுக்கு ஏதோ உறுத்தியிருக்க வேண்டும் அங்கேயே உற்று உற்றுப் பார்த்தான்.
அந்த நேரம் தூரத்தில் இரைச்சல்…. புழுதியைக் கிளப்பியபடி இராணுவ வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. இரைச்சலின் அடையாளத்தை உணர்ந்த கிழவன் அவசரமாக காளைகளை உசார்ப்படுத்தி வண்டியில் ஏறிக் கொண்டான். இதற்குள் இராணுவ வாகனங்கள் கிழவனைத் தாண்டி வேகத்தைக் குறைத்தன. முதலாவது ஜீப்பில் வந்த சிப்பாய் “அடோ…அடோ இங்கி..என்னெ செய்றே!” என்று விரட்டியபடி ஜீப்பைவிட்டுக் குதித்தான். கிழவனும் நிழலுக்கு ஒதுங்கியதாக பயத்தோடு பிதற்ற ஆரம்பித்தான். மூன்றாம் வாகனத்தில் இருந்து மிடுக்கோடு ஒரு குரல் சிப்பாயை அதட்டச் சிப்பாய் தனது வாகனத்தில் ஓடிப்போய் ஏறிக்கொண்டான். மீண்டும் வாகன அணி நகர்ந்தது.
ஆ….. அதோ அந்த கடைசி வாகனத்தில் போறான்.. அவன்தான் நான் கூவிக்கொண்டு பறந்தேன். என்னோடு வேகமாக மற்றைய ஏழ்வரும் பறந்து வர அந்தச் சிப்பாயின் அருகே சென்றோம்.
அந்தச்சிப்பாய் அவன் பார்வை கிழவன் நோக்கிய அதே புதரைக் கிலியோடு நோக்கியபடி இருக்க அந்த இராணுவ வாகன அணி நகர்ந்து சென்றது. எங்கள் எண்மரால் எதுவும் செய்ய இயலவில்லை… திருப்பிப்பறந்து இலுப்பையடிக்கு வந்தோம். கிழவனும் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தான்.
ஏமாற்றத்துடன் எங்கள் காத்திருப்பு அடுத்த வரவுக்காக ஏங்கியபடி….. அந்தப் புதர்ப்பக்கம் இன்னும் எனது கையோடு இணைந்தபடி என் கடிகாரம் ஒளிகொடுத்துக் கொண்டிருக்கிறது.

திங்கள், 22 ஜனவரி, 2007