செவ்வாய், 28 ஜூலை, 2009

அரவி அரவித்தழுவும் சுகிப்பில் இரைமீட்டிகள்.










செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின.
போராட்டம் முடிச்சவிழ்த்தது.
பழக்கத்திலிருந்து விடுபடாமல்
செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின.
முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை
உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது.

அருகாமையில் குண்டுகள் வீழ
சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை
பசுமை வெளிகளையும்,
பனிபடரும் குளுமை தேசங்களையும்
தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன.

ஈழச்சமூகத்திலிருந்து அகற்றப்பட்ட ஒன்றை
இருப்பதாய் உரைக்கும் பழையவை.....

புலம்பெயர்விலும்
முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பேசும்
வழமையில் இருந்து மாற்றமடையாது
முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து
அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி
இன்னும் இரைமீ்ட்கின்றன.

நாகரீக வெளிகளின் மெருகேற்றலில்
செக்கிழுப்புகள் பரவுகின்றன.
சரி,......
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுங்கள்.

அத்தனை பேரும் உத்தமர்தானா?
அடுத்த தலைமுறை கேட்கும்.

வியாழன், 23 ஜூலை, 2009

ஒப்பாரிக்கு மேல் ஒன்றேதும் உண்டென்றால்.....


tamil1.jpg

கண்ணீர், செந்நீர்

ஒப்பாரி, நடைபிணம்

காட்சிப்படுத்தலின் உச்சம்.

தென்னிலங்கைத் தெருக்களில்

இனவாதப் பேய்களின் பிணக்கூத்து.

விழி பறிக்க ஒரு கூட்டம்

வீதியிலே மொழி கேட்டு

முடமாக்க ஒரு கூட்டம்.

கடை நொறுக்க ஒரு கூட்டம்

குடி பறித்துக் களவாட ஒரு கூட்டம்.

பெண்மை சீண்ட ஒரு கூட்டம்.

பின் புணர்ந்து பிணமாக்க ஒரு கூட்டம்.

தார் கொதியத்தில் குழவியிட,

கொதிக்கும் குறியிழுக்க,

கொங்கைகள் அறுத்தெறிய…

மிதிக்கும் காலடியில்

மென் மழலை துடித்தலற,

தாய்மையிடும் ஓலத்தையும்

இரசிப்பதற்கு ஒரு கூட்டம்.

நிர்வாணப் படுத்தியதும்

உயிர்விதையில் மிதித்து

ஓலமிட வைத்ததுவும்

பெற்றவன் உற்றவன்

பெற்றெடுத்த மக்களின் முன்

எத்தனை பெண்களை?

எத்தனை மிருகங்கள்?

ஓர் உயிர் சிதைக்க

ஒரு நூறு இனவாதியர்

பேதைத் தமிழனைப்

பிய்த்தெறிந்த வரலாறு.

ஒப்பாரிக்கு மேல்

ஒன்றேதும் உண்டென்றால்

அதுவே அன்றெம் தமிழர் நிலை.

புலம் பெயர் உறவுகளே!

தமிழர் விழி பறிப்பால்,

கொதிக்கும் குறியிழுப்பால்,

பெண்மையுற்ற பெரு வலியால்,

பிஞ்சுகளின் உயிர்ப் பிசைவால்,

மொழியுற்ற கலியால்,

இனவாதப் பிணக்கூத்தால்,

உடல் பிய்ந்து துடிதுடித்து

உயிர் துறந்த உறவுகளால்

வாழ்வெடுத்து வந்தவர் நாம்

இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.

வாழ்வெடுத்து வந்து விட்டு

வலி மறந்து போனோமா?

ஆள்பவரில் மாற்றமில்லை

மாள்வு ஈழத்தமிழர் மேல்

மாலையிட்டே நிற்கிறது.

வாழ்ந்த மண், சூழ்ந்த கலி

வந்த மண்ணில்ச் சொல்லி

ஆழ்ந்த துயர் களை!

அகிலம் என்னும் கரம் பற்றி

அன்னை விழி துடை!

இனவாதப் பேய் தின்ற

உறவுகள் சாந்தி பெற

இனம்வாழ உடன் இயங்கு!

இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.

எத்தனை ஆண்டுகள்?

எத்தனை வாதைகள்?

இன்னும் செத்தவர் பட்டியல்

தொடர்கதை ஆகுது.

குடிமனை இழப்பதும்,

குறவர்போல் அலைவதும்

உறவுகள் சரிவதும்,

உதிரத்தில் குளிப்பதும்,

கருணையே இல்லையா?

சர்வ தேசங்களே!

விழி அகலத் திறந்தெங்கள்

வேதனையைப் பாருங்கள்!

மெய் அறிய வாருங்கள்!

இனவாதம் குதறும் எம்

வாழ்வியலை கணக்கெடுங்கள்!

போர் எங்கள் கைகளிலே

திணிக்கப்பட்ட நிலை உணர்வீர்!

தடை என்னும் தராசினிலே

தாழ்ந்திருக்கும் தவறறிவீர்!

ஒப்பாரிக்கு மேல்

ஒன்றேதும் உண்டென்றால்

அதுவே இன்றுமெம் தமிழரின் நிலை காண்பீர.;

இது நினைவுபடுத்தலின் உச்சம் மட்டுமல்ல

நிகழ்வுகளின் வலி உரைப்பு.

tamil2.jpg

திங்கள், 13 ஜூலை, 2009

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும். இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய ஒற்றைப் பாகன் இடறி விழட்டும் இல்லாவிடின் ஒரு புரவி தடம் மாறட்டும்.

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.
வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.
எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது
எதுவரைக்கும் தான் முடியும்?
எழும்போது உலகம் தெளியும்.


வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன.
வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.
உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்
கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.

முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.
மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.
செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்
நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென
வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.

எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.
சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.
ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்
பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,
மண்தின்னக் கிடக்கின்றர்,


கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்
கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.
விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு
பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.
ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து
உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்
நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்
பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.

ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்
இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.

இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான
இயலாமை நடிப்பில்
ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.

மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.
இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.

இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?
அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.
இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.



அகழான்கள் குடைந்தெடுத்தால்…
ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?


விழுதுகள்
இறங்கும்.,
குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்
அகழான்கள் வெளியேறும்.,
இல்லை அடியினில் நசுங்குண்டு சாகும்.

இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு
இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.
கனத்த பெரு வெளியின் கானலை நம்பி
இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.

அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்
இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்
அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.
இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய
ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்
இல்லாவிடின்
ஒரு புரவி தடம் மாறட்டும்.

காட்சிகள் மாறுகின்ற வேளைக்காய்
இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.
புதிதென்றால் அல்லவா.......
நாங்கள்
பொலபொலவென்று அழுது தீர்க்க……
பழகி விட்டது.

வியாழன், 9 ஜூலை, 2009

"பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப்பூச்சியக்கா - நீ பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா.?"




அகரத்தில் ஆரம்பிப்பதுதானே முறை.
அழகான மணற்பரப்பில் "அ" எழுதி அன்னை தமிழை எனக்கு ஊட்டிய ஆரம்பக் கல்விக்கூடம் வல்வையின் "கணபதி பாலர் பாடசாலை"
"பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப்பூச்சியக்கா - நீ
பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா."
அசை போடல் ஆடு மாடுகளுக்கு மட்டுந்தானா?
கூடப்படித்தவர்கள் பலர் விரிந்து பரந்த உலகில்,
சிலர் மலர்ப்படுக்கையிட்டு மாவீரர் இல்லங்களில்..... என் இதயம் கனப்பதும், கசிவதும் இவர்களிடத்தில் மட்டுமே.
அந்த அழகான நாட்கள் இன்னும் எனக்குள் எண்ணச்சிறகுகளை விரித்துப் பறக்கின்றன. திரும்பத் திரும்ப கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பதில் தனிச்சுகம்.




வெள்ளி, 3 ஜூலை, 2009

தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக…




தேடற்கவியின் உழல்வை
இதயக்குழி உள்வாங்க
உயிர்ப்பின் மூச்சு
ஓசோன் ஓட்டையாக…

காலம் எழுதியின் கவனப்பிழை
கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்…
தரித்த குளவியின் பாதி உடல்
சீழ்கட்டிப் போய் சிகிலமாக…
பிணவாடை, கொள்ளை கோமாரி
ஐயோ….
பச்சை உடம்புக்காரி படுக்கையிலே….

காலம் எழுதியை அழைத்து வருவீர்.
வனையும் சூட்சுமத்தை வசீகரித்து
கால் செருப்பாக்கி
கொப்பளிக்கும் கானல் வெளியில்
கிடந்துழலும் மனிதர்களின்
வேதனையை உணர்த்த வேண்டும்.

பாழும் உலகிடையே வாழக் கேட்டு
வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு
தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.

த்தூ…..
மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து
மணிக்கணக்காப் பேசுக.

எங்கே எவர் தலையில்
குண்டுகளைக் கொட்டலாம்?

இன்னும் குற்றுயிராய், குலையுயிராய்
துடிதுடிக்க வதைத்தழித்து
மந்தைப் பட்டிக்குள் போட்டு மேய்க்க
எந்தச் சனியனுக்குத் திட்டமிருக்கோ
அங்கின போய்க் கொஞ்சிக் குலவுக.

பொட்டைடைக்கண்களுக்கு
அசோக மலர்களிடம் அடங்காத ஆசையோ?
இத்தொப்பி எவருக்கென்று
தொல்பொருள் ஆராய்ச்சி தேவையில்லை

காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்
கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?

கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!
ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து
அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….
போதுமப்பு உன் நடிப்பு.,

எல்லை தாண்டி வந்த கேடி
உயிரறுத்து துவசம் செய்தான்.
பள்ளி முதல் பங்கர்வரை
பாழ்படுத்திப் போனான்.
உயிர் கிடந்து உழன்றதனால்
ஊனத்துடன் அழுதலைந்தோம்.
விட்டானா?...
கந்தகக்குண்டுகளில் நஞ்சிருத்தி
கொன்றொழித்தான்
சந்ததி முழுவதையும்
சகதிக்குள் புதைய வைத்தான்.
மந்தைகளாய் அடைத்துள்ளான்.

அவன் சமபந்தி வைப்பானாம்.
சந்தர்ப்பம் பார்த்து சர்ப்பங்கள் ஆடுகின்றன.

வெந்து கிடக்கிறது உள்ளம்.
மீளத் தெளிவு
மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்
காலமுட்கள் கைநீட்டுகின்றன.

உயிர்த்தெழுக.
பீனிக்ஸ்ஸின் பிறப்புக்கு நாள் குறித்தாயிற்று.