கண்ணீர், செந்நீர்
ஒப்பாரி, நடைபிணம்
காட்சிப்படுத்தலின் உச்சம்.
தென்னிலங்கைத் தெருக்களில்
இனவாதப் பேய்களின் பிணக்கூத்து.
விழி பறிக்க ஒரு கூட்டம்
வீதியிலே மொழி கேட்டு
முடமாக்க ஒரு கூட்டம்.
கடை நொறுக்க ஒரு கூட்டம்
குடி பறித்துக் களவாட ஒரு கூட்டம்.
பெண்மை சீண்ட ஒரு கூட்டம்.
பின் புணர்ந்து பிணமாக்க ஒரு கூட்டம்.
தார் கொதியத்தில் குழவியிட,
கொதிக்கும் குறியிழுக்க,
கொங்கைகள் அறுத்தெறிய…
மிதிக்கும் காலடியில்
மென் மழலை துடித்தலற,
தாய்மையிடும் ஓலத்தையும்
இரசிப்பதற்கு ஒரு கூட்டம்.
நிர்வாணப் படுத்தியதும்
உயிர்விதையில் மிதித்து
ஓலமிட வைத்ததுவும்
பெற்றவன் உற்றவன்
பெற்றெடுத்த மக்களின் முன்
எத்தனை பெண்களை?
எத்தனை மிருகங்கள்?
ஓர் உயிர் சிதைக்க
ஒரு நூறு இனவாதியர்
பேதைத் தமிழனைப்
பிய்த்தெறிந்த வரலாறு.
ஒப்பாரிக்கு மேல்
ஒன்றேதும் உண்டென்றால்
அதுவே அன்றெம் தமிழர் நிலை.
புலம் பெயர் உறவுகளே!
தமிழர் விழி பறிப்பால்,
கொதிக்கும் குறியிழுப்பால்,
பெண்மையுற்ற பெரு வலியால்,
பிஞ்சுகளின் உயிர்ப் பிசைவால்,
மொழியுற்ற கலியால்,
இனவாதப் பிணக்கூத்தால்,
உடல் பிய்ந்து துடிதுடித்து
உயிர் துறந்த உறவுகளால்
வாழ்வெடுத்து வந்தவர் நாம்
இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.
வாழ்வெடுத்து வந்து விட்டு
வலி மறந்து போனோமா?
ஆள்பவரில் மாற்றமில்லை
மாள்வு ஈழத்தமிழர் மேல்
மாலையிட்டே நிற்கிறது.
வாழ்ந்த மண், சூழ்ந்த கலி
வந்த மண்ணில்ச் சொல்லி
ஆழ்ந்த துயர் களை!
அகிலம் என்னும் கரம் பற்றி
அன்னை விழி துடை!
இனவாதப் பேய் தின்ற
உறவுகள் சாந்தி பெற
இனம்வாழ உடன் இயங்கு!
இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.
எத்தனை ஆண்டுகள்?
எத்தனை வாதைகள்?
இன்னும் செத்தவர் பட்டியல்
தொடர்கதை ஆகுது.
குடிமனை இழப்பதும்,
குறவர்போல் அலைவதும்
உறவுகள் சரிவதும்,
உதிரத்தில் குளிப்பதும்,
கருணையே இல்லையா?
சர்வ தேசங்களே!
விழி அகலத் திறந்தெங்கள்
வேதனையைப் பாருங்கள்!
மெய் அறிய வாருங்கள்!
இனவாதம் குதறும் எம்
வாழ்வியலை கணக்கெடுங்கள்!
போர் எங்கள் கைகளிலே
திணிக்கப்பட்ட நிலை உணர்வீர்!
தடை என்னும் தராசினிலே
தாழ்ந்திருக்கும் தவறறிவீர்!
ஒப்பாரிக்கு மேல்
ஒன்றேதும் உண்டென்றால்
அதுவே இன்றுமெம் தமிழரின் நிலை காண்பீர.;
இது நினைவுபடுத்தலின் உச்சம் மட்டுமல்ல
நிகழ்வுகளின் வலி உரைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக