செவ்வாய், 21 அக்டோபர், 2008

கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு.... மெளனங்கள் கலைகின்றன - 2


கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பாவம் அல்ல.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.


இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் தமிழ்ப்பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.




முட்டிய விழிகளும், முதல்வலியும்



வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும், கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு. அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில், வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும். எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும். அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும். கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல் நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும்.
ஒரு ஆறுதல் இன்னும் இடியாமல் வெடிப்புகளுடன் நிமிர்ந்து நிற்கும் பிளாட், கொஞ்சம் இயற்கையிடம் இருந்து எல்லா நேரமும் என்றில்லாவிடினும் பல சமயங்களில் பாதுகாப்புத்தரும் தேவதையாகத் இன்று வரைக்கும் திகழ்கிறது.
அன்றிரவு மட்டும் அந்தக் காலநிலைக் குழப்பம் அந்த பெருமழையைத் தோற்றுவிக்காது விட்டிருந்தால் என்னினத்தின் வலியை நான் முதன்முதலாக உணரும் காரணி வேறு ஏதாவதாக இருந்திருக்கும்.
எப்போதுமே வாழ்வில் ஏற்படும் முதல் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல் மனக்கூட்டுக்குள் பதிந்துவிடும். இதுவும் அப்படித்தான்...
முதல் காதல், முதல் முத்தம் என்று இன்பியல் பக்கம் போவதற்கு முன் நிறையவே விடயங்களை இங்கு எழுத இருக்கிறது.

கிளுகிளுப்புக் கதைகளை வாசித்த பலர் இங்கு வாசிக்கக்கூடும். இவ்வனுபவப் பகிர்வில் கிளுகிளுப்புத் தேடவேண்டாம். பெண்மையின் பருவமாற்றங்கள்கூட இன்றைய தமிழீழப் பெண்களுக்கு எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதற்கு ஒரு சாட்சியம் அவ்வளவுதான். இது அந்நாள் வலி. இந்நாளில் இதன் வடிவம், வலி எல்லாம் பேசப்படாப் பொருளாக ஒவ்வொருவருக்குள்ளும் ஆழப்புதையுண்டபடி....., எம்மினம் வாழ்விற்கான யாசிப்பையே பிரதானமாகக் கொண்டதாக நகர்கிறது.

ஆகாயம் பார்த்துக்கிடந்த என்வீட்டின்மேல், அந்த நடுச்சாமத்து மழை அனுமதியின்றி நுழைய நடுவீட்டில் குளம் ஒன்று தன்னை உருவமைக்க, அடங்கமாட்டேன் என்று நாலாபக்கமும் தண்ணீர் கட்டுடைத்துப் பாய்ந்தது, அப்பப்போ பாதுகாப்புத்தரும் பிளாட் பகுதியின் நிலமெல்லாம் புனல் விரிந்து பரவி வழிதேடி ஓடியது.
நான் படுத்திருந்த பாயை நனைத்து ஓடிய நீரில் மட்டும் செம்மை தன்னை கரைத்தோடி சற்றுத் தள்ளிப் படுத்திருந்த என் தாய், தந்தையையும் நனைத்து நகர்ந்தது. பூப்படைந்த இருநாள் பருவமகளாக அனுபவமில்லா அணிகளுடன் அந்த எரிந்தவீட்டின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை நனைத்த மழைநீர் என் பருவமாற்றத்தின் உதிரத்துளிகளைக் கரைத்து என் பெற்றேரை நனைத்த அந்தப் பொழுது, அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

திங்கள், 20 அக்டோபர், 2008

தாயின் மடியில் தமிழ்ப்பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.




கருணைப் பெருங்கடலே!
கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே!
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே!
திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில்
சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம்.

தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட
கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும்
தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும்.

உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு
உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே!
தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது.
தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது.

பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே!
பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே!
மனித்த பிறவியதன் மாபெரும் தத்துவத்தின்
தனித்துவம் காக்கும் மா.. தாய் நீயல்லவா.

தொப்புள் கொடி உறவு துணை வந்து நிற்கிறது.
தொய்வின்றி எம் பயணம் விடுதலைக்காய் தொடரும்.
அர்ப்பணிப்பு எங்களதாய், அரவணைப்பு உங்களதாய்
காலமகள் இணைத்துவிட்டாள்...
சற்றுக் களிக்கின்றோம் உறவுகளே.

வள்ளுவன் வாழ்ந்த வானளந்த தமிழகமே!
உள்ளிருந்து எழுகின்ற எம் நன்றிக்கு அளவில்லை
உப்புக் காற்றுரசும் ஊமைக்காயங்களுடன்
அக்கினி வீச்சுகளை மென்றுமென்று நீர் குடித்தோம்.

கோடிக்கரையிருந்து கொடியொன்று தெரியாதா?வான்முட்டும் உறவுகளின் வல்லமைக் குரல்கேட்டு வாரணம் வழி விடாதா?
ஆனமட்டும் ஏங்கியது நேற்றைய கதையாக, இன்று
நெக்குருகி கொஞ்சம் இளைப்பாறும் வரம் பெற்றோம்.

ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது
காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது
பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு
புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.

தேமதுரம், பால், பழமும் தெவிட்டாத தெள்ளமுதும்
நாவுக்கு வாழ்வு தரும், நலத்திற்கு மீள்வு தரும்.
பாவியர் ஏவும் சாவுக்கு மாள்வு தர
பனிக்கும் உறவுகளே!.. பாரினில் வழி செய்க.

காலப் பெரு வெளியில் கடந்தவைகள் எத்தனையோ..
கண்ணில் நீர் வழிய, இழந்தவைகள் எத்தனையோ...
விழி கசியும் உறவுகளே!.. வாழக் கேட்கின்றோம்
வழி மறிக்கா நிலை ஒன்றை வனைந்து தருக.