கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்?

சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய
மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று
வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம்
உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்?

வருக புத்தாண்டே.
அழைத்தாலும், விட்டாலும்
அகலக்தடம் விரித்து - எங்கள்
வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய்.

அழைத்தென்ன?
விட்டென்ன?
அனுமதி கேட்டா வருகின்றாய்?
வந்தது வந்துவிட்டாய்
வலிய வந்த சீதேவியே!
எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு.

நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள்.
ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி,
கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள்.

எங்களுக்கென்று பத்திரப்படுத்த,
செல் விழுந்த சிதைவிடையே
உயிர் காவி ஓடியதையும்,
எரிவாயுத் தணலிடையே
உயிர் முனகித் தப்பியதையும்,
கொத்தணிக்குண்டிடையே உடலின் பாகங்கள்
தொலைந்து தேடியதையும்,
கூட்ட மந்தைகளாய் மாற்றுடுப்பற்று,
சேற்று நாற்றமுடன் தூங்காத இரவுகளையும்,
இராணுவத்தின் உல்லாசத் தேடல்களுக்கு
உரித்த அம்மணத்தின் அவமானங்களையும்,
மீளெழலின் அச்சத்தால்
கருவறுப்பின் எச்சங்களையும்,
சாட்சிகள் அற்றுப் போன மனிதப் பேரவலத்தின்
அனுபவங்களை மட்டுமே மிச்சப்படுத்தி
மீதமுள்ள அத்தனையையும் களவாடிப் போய்விட்டாள்.

இந்த இலட்சணத்தில் வருகைப் பாட்டெழுத என்
எழுதுகோலுக்கு மனம் வருமா?

பார்த்திருந்தோம்.
மனுக்குலத்தில் செத்துவிட்ட மனிதத்தின் பக்கங்களை,
படிக்க ஒரு வரலாறு படைத்துவிட்டு பாதகி போயொழிந்தாள்.

மூக்குச் சிந்திக் கிடந்து முனகும் கூட்டமென எம்மை ஆக்கிவிட்டு
அந்த அகங்காரி அகன்றுவிட்டாள்.
சரி அவளைப்பற்றி என்ன கதை?
போனவள் போகட்டும்.

வந்தவள் நீயென்ன வரங் கொண்டு வந்தனை?

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனுக்குப் பொங்கலிடும் நாளில்
பிடி நெல்மணிக்கு கையேந்திக் கிடக்கும் சனத்திற்கு…
என்ன கொண்டு வந்தாய்?

இதென்ன புதுப்பழக்கம் என்று
குழப்பத்தில் தோயாதே.

வாசல் வந்த உனை நிறுத்தி
வசை பாடல் என் நோக்கமல்ல.

உனைக் கொண்டாடி...
உனக்கு வருகைப் பாட்டெழுதும் கவிஞனும்
இப்போது கொடுஞ்சிறையில்..
எவர் பாடுவார் உனக்கு வரவேற்பு?

கொள்ளிக் கண்ணாள் வந்து
கொலு நொறுக்கிப் போய்விட்டாளே.

வருகின்ற எவரையும்...
வா என்றழைக்க முடியாமல் வலிக்கிறது இதயம்.
வாசல் வந்துவிட்டாய்
நான் விரட்டினாலும்
நீ போய்விடவா போகிறாய்?

வாசல் தேடி வந்தோரையும்,
நேசமுகம் செய்தோரையும்
விருந்தோம்பி வெந்து போயுள்ளோமடி.
வேதனையைத் தந்து போனோருக்கெல்லாம்…
எங்கள் தெங்குகள் ஈந்த
தேனமுதம் தந்து தாகங்கள் தீர்த்தோமடி.
வெந்து கருகியுள வன்னி மடியினிலே,
வீணை நெகிழ் இசையில் விருந்தும் இட்டோமடி.
இன்று விரக்தி உற்றோமடி.

வந்ததுதான் வந்தாய்
வேடிக்கையைப் பார்
இட்டவனும் தொட்டவனும் அரச கட்டில் ஏற
பட்டவனின் தலையில் பல்லக்குக் கட்டுவதை
கூசாமல் தமிழச்சியை சூறையாடச் சொன்னவன்
குழையக் குழைய ஓட்டுக் கேட்டு ஊருராய் வருகிறான்
ஓலமிட ஓலமிட எம் சனத்தைத் தொலைத்தவன்
வாக்குக்காய் தேடி வலயவலய வருகிறான்.

கையை உடைத்தவனுக்கு கை கொடுக்க முடியுமா?
கழுத்தை அறுத்தவனுக்குத் தோள் கொடுக்க முடியுமா?

வாசலுக்கு வந்த 2010ஏ
அவலத்தைத் தந்தவன்கள் அடிபட்டு விழுவதற்கும்
கொடுக்குக் கட்டினவன்கள் கோவணத்தைப் பிய்ப்பதற்கும்,
அரசியல் தெருவெளியில் அம்மணமாய் திரிவதற்கும்,
வினையை விதைத்தவனே வினையாலே சாவதற்கும்
வழியிருந்தால் கொண்டு வா
வரவேற்கிறேன் உன்னை.

இன்று...
சாபங்கள் மட்டுமே என் நாவேறி நிற்கின்றன.

சரித்திரப் புரட்சி உன் பரப்பில் நிகழின்
சாகாவரம் பெற்ற பெரும் பாடலில் உனைப் புனைவேன்.
சாக்குக்கோ, சந்தமிடும் பாட்டுக்கோ இதை எழுதவில்லை
சத்தியத்தின் மூச்சில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா?

இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை
ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின்
செவிப்பரைகளில் மோதி மோதி
இந்து சமுத்திரத்தில்,
ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில்
குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை
உரைத்துரைத்து ஓய்ந்து போனது.

கண் மறைந்து போன கால நீட்சியில்
கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும்,
கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல்
நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது.

வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை,
வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று.
தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று.

நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள்
ஊதிச் செல்கிறது காலக்காற்று
காலநீட்சியில் நீளும் கோலங்களில்,
கண்ணீரின் உலர்ச்சியை எழுதியபடியே
பூமிக்கரியம் புலன்களை உலுக்கிறது.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள்
எங்கள் மூச்சுக் காற்றைத் தவிர
அத்தனையையும் அள்ளிச் சென்று ஆறு மாதங்கள் கடந்தாயிற்று,
எனினும் அவலம் ஆறவில்லை, ஆற்றப்படவுமில்லை
முன்னரைக் காட்டிலும்,
மூச்சின் உணர்வில் வெம்மை அதிகரித்துக் கிடக்கிறது.

இன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்
ஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்
விற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற
எங்களைப் பார்க்கப் பஞ்சிப்படுகிறது.
இருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.

மீட்பின் தேடல் ஓயாதவரைக்கும்
நித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.
ஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்
தேடுவதற்கும் அனுமதியற்று அவலமுறினும்
உயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.

காட்சி மாறி விட்டது.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும் என்று
அன்றொருநாட் சொன்னதுபோல் சம்பவத் தொடர்கள்
ஆரம்பக் கோட்டுக்குள் ஆயத்தமாகி விட்டன.
எலுமிச்சை எடுத்து எல்லோரும் ஒரு முறை
உச்சந்தலைகளில் உரசிக் கொள்ளுங்கள்.
போதைக்கான மருத்துவம் அல்ல பித்தத்திற்கான வைத்தியம்.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,
வணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,
அன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்
இருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்
பட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு


விழுகை என்பது விதிப்படியும்
எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றொரு நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்
விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயின.

அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கின.

இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

இன்றைகள் மட்டுமேன்....
துருவ முனைகள் வரைக்கும்
உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்
முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்
சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..
கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான்




படுக்கையில் கிடந்தபடி
பாதை கேட்காதே
எழு….. உடல் முறித்து,
பத்தடி நட.
பாதை தெரியும்.
குப்புறக் கிடந்தால்
சுவாசமே சுமைதான்.

திரும்பிப் பார்.
விடுதலைக்காக கடந்த
தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்
பார்வையில் புலப்படும்.
தணற்காடுகளில் தீய்ந்தபோது
நெஞ்சம் வேகியது
சதுப்பு நிலங்களில் புதைந்தபோது
சலனம் ஆடியது.
மீள எழவில்லையா?

களத்திலேயே மீண்டெழுந்த
உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?
போராட்டக்களம் மாறியிருக்கிறது.
இப்போது சூறாவளி அவ்வளவே.

ஒட்டுமொத்த இன அழிப்பை
உலகம் கணக்கெடுக்கிறது.
துயர் கொல்லுதென்று
நீ முடங்கிவிட்டால்
இழப்புகள் கூட
மௌனித்துப் போகும்.

அழுவதாகிலும்...
அம்பலத்தில் நின்று அழு.
இது உனக்கு மட்டுமான வலியல்ல
நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.

நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.
எத்தனை பெரிய துயரில் இருக்க
இரக்கமில்லாமல் எழுதுகிறாய்
இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.

முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?
முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.
உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்
பெருகும் துயர் தீர்க்கப்
போராடுவது எப்படி?

விழி நீரை விரட்டு.
வேதனையை உரமாக்கு.
எழு தீயில் ஒளியேற்று.
ஓர்மத்தை நிறமாக்கு.
உயிருக்கு ஆணையிடு.
இவ்வளவும் போதும்.
உணர்வாய். நீயே வழிகாட்டி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.



கண்ணெதிரே கலையுமா கனவு?
மண்ணெனவே உதிருமா மனது?
நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்
ஒப்பேற முன்னரே உருகியா போகும்?
இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட
மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?

இது காலச்சுழி
சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.
சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.
மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.
மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.
உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.
ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்
முக்காற்சுற்று முடித்துவிட்டது.
சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு
பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.
காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.

நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.
மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை
முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.
ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு
உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.
வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.

என்ன இருக்கிறது?
எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.
உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.
அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.
அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.
உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்
உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.
கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.

மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.
புலத்திற்குள் பொருந்திக் கொள்.
புலன் தெளிவுறு.
உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு
எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.
கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.
ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.
ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்
பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.
அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.
அழிவுற்றுப் போகாது.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.
என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்
கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.
விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,
மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.
புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்
கூர் உனை பொசுக்கும்.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.

செவ்வாய், 28 ஜூலை, 2009

அரவி அரவித்தழுவும் சுகிப்பில் இரைமீட்டிகள்.










செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின.
போராட்டம் முடிச்சவிழ்த்தது.
பழக்கத்திலிருந்து விடுபடாமல்
செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின.
முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை
உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது.

அருகாமையில் குண்டுகள் வீழ
சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை
பசுமை வெளிகளையும்,
பனிபடரும் குளுமை தேசங்களையும்
தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன.

ஈழச்சமூகத்திலிருந்து அகற்றப்பட்ட ஒன்றை
இருப்பதாய் உரைக்கும் பழையவை.....

புலம்பெயர்விலும்
முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பேசும்
வழமையில் இருந்து மாற்றமடையாது
முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து
அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி
இன்னும் இரைமீ்ட்கின்றன.

நாகரீக வெளிகளின் மெருகேற்றலில்
செக்கிழுப்புகள் பரவுகின்றன.
சரி,......
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுங்கள்.

அத்தனை பேரும் உத்தமர்தானா?
அடுத்த தலைமுறை கேட்கும்.

வியாழன், 23 ஜூலை, 2009

ஒப்பாரிக்கு மேல் ஒன்றேதும் உண்டென்றால்.....


tamil1.jpg

கண்ணீர், செந்நீர்

ஒப்பாரி, நடைபிணம்

காட்சிப்படுத்தலின் உச்சம்.

தென்னிலங்கைத் தெருக்களில்

இனவாதப் பேய்களின் பிணக்கூத்து.

விழி பறிக்க ஒரு கூட்டம்

வீதியிலே மொழி கேட்டு

முடமாக்க ஒரு கூட்டம்.

கடை நொறுக்க ஒரு கூட்டம்

குடி பறித்துக் களவாட ஒரு கூட்டம்.

பெண்மை சீண்ட ஒரு கூட்டம்.

பின் புணர்ந்து பிணமாக்க ஒரு கூட்டம்.

தார் கொதியத்தில் குழவியிட,

கொதிக்கும் குறியிழுக்க,

கொங்கைகள் அறுத்தெறிய…

மிதிக்கும் காலடியில்

மென் மழலை துடித்தலற,

தாய்மையிடும் ஓலத்தையும்

இரசிப்பதற்கு ஒரு கூட்டம்.

நிர்வாணப் படுத்தியதும்

உயிர்விதையில் மிதித்து

ஓலமிட வைத்ததுவும்

பெற்றவன் உற்றவன்

பெற்றெடுத்த மக்களின் முன்

எத்தனை பெண்களை?

எத்தனை மிருகங்கள்?

ஓர் உயிர் சிதைக்க

ஒரு நூறு இனவாதியர்

பேதைத் தமிழனைப்

பிய்த்தெறிந்த வரலாறு.

ஒப்பாரிக்கு மேல்

ஒன்றேதும் உண்டென்றால்

அதுவே அன்றெம் தமிழர் நிலை.

புலம் பெயர் உறவுகளே!

தமிழர் விழி பறிப்பால்,

கொதிக்கும் குறியிழுப்பால்,

பெண்மையுற்ற பெரு வலியால்,

பிஞ்சுகளின் உயிர்ப் பிசைவால்,

மொழியுற்ற கலியால்,

இனவாதப் பிணக்கூத்தால்,

உடல் பிய்ந்து துடிதுடித்து

உயிர் துறந்த உறவுகளால்

வாழ்வெடுத்து வந்தவர் நாம்

இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.

வாழ்வெடுத்து வந்து விட்டு

வலி மறந்து போனோமா?

ஆள்பவரில் மாற்றமில்லை

மாள்வு ஈழத்தமிழர் மேல்

மாலையிட்டே நிற்கிறது.

வாழ்ந்த மண், சூழ்ந்த கலி

வந்த மண்ணில்ச் சொல்லி

ஆழ்ந்த துயர் களை!

அகிலம் என்னும் கரம் பற்றி

அன்னை விழி துடை!

இனவாதப் பேய் தின்ற

உறவுகள் சாந்தி பெற

இனம்வாழ உடன் இயங்கு!

இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.

எத்தனை ஆண்டுகள்?

எத்தனை வாதைகள்?

இன்னும் செத்தவர் பட்டியல்

தொடர்கதை ஆகுது.

குடிமனை இழப்பதும்,

குறவர்போல் அலைவதும்

உறவுகள் சரிவதும்,

உதிரத்தில் குளிப்பதும்,

கருணையே இல்லையா?

சர்வ தேசங்களே!

விழி அகலத் திறந்தெங்கள்

வேதனையைப் பாருங்கள்!

மெய் அறிய வாருங்கள்!

இனவாதம் குதறும் எம்

வாழ்வியலை கணக்கெடுங்கள்!

போர் எங்கள் கைகளிலே

திணிக்கப்பட்ட நிலை உணர்வீர்!

தடை என்னும் தராசினிலே

தாழ்ந்திருக்கும் தவறறிவீர்!

ஒப்பாரிக்கு மேல்

ஒன்றேதும் உண்டென்றால்

அதுவே இன்றுமெம் தமிழரின் நிலை காண்பீர.;

இது நினைவுபடுத்தலின் உச்சம் மட்டுமல்ல

நிகழ்வுகளின் வலி உரைப்பு.

tamil2.jpg

சனி, 3 பிப்ரவரி, 2007

பெண் என்னும் பூகம்பம்












துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.
போராளியான பெண் ஆணுக்கு நிகராக

அனைத்திலும் மிளிர்கிறாள்.
அல்லாதவள்...அன்றாட அல்லல் மீள
அல்லும்,பகலும் அவதியுறுகிறாள்.
புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள்
பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம்
சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும்
புதையுண்டு கிடக்கிறோமே.....
வேண்டாமென்று சொல்லவில்லை
வீறு கொண்டெழுந்து.....வேகும் விதியோடு
வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள்
கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே.
அன்னையமும் அதை மேவும் பெண்ணியமும்

காலச்சுழிக்குள்ளே காணாமல் போனதுவோ?
வங்காலைச் சிறுபெண்ணின்

வலி நிறைந்த கொலை அறிந்தும்
கண் காணா நிலையென்றா கனல் எடுக்க மறந்தோம்?
செந்தாழம் சிதைந்தாற்போல் சிறு தேகம் கிடந்தநிலை
செவ்விழிகள் மொய்த்து எங்கள் சிந்தைக்குள் புகவில்லையா?
பெண்ணியம் பேசி பெருமைகளைக் குவிப்போரே!

கண்ணிய வாழ்வுக்கேங்கும்
ஈழப்பெண் கண்ணீரைக் களமேற்றும்!
கண்ணென்றும், கனியென்றும் கவி கொஞ்சில் கொதிப்போரே!
பெண்களைக்.....காடை அங்கே கசக்குகிறான்.
காணாமல் கிடப்பது ஏன்?
அல்லைப் பிட்டிக்காய் அழுத கண்ணீர் காயவில்லை

ஆயிரம் அமைப்பிருந்தும் ஐ.நாவின் அம்பலத்தில் ஏறவில்லை
வங்காலை தொடர்கதையாய் வலியின் வரவெழுதி
எங்கால அடுத்த இடியென இதயத்தில் வலித்திருக்க
சொல்லி வைத்தாற்போல வல்லிபுன முன்றலிலே
வானரக்கர் குண்டு போட்டர்.எண் எட்டின் பெருக்கத்தை
எமன் தின்று சென்றான்.கண்ணுற்றும்,
காற்றுவழி சேதி கேட்டும்
எண்ணிக்கையற்று எரிமலையாய் எழுந்தோம்...பின் என்ன?
ஓர் மாதம் கடக்கு முன்னே மல்லாக்கப் படுத்துவிட்டோம்.
அன்றங்கு பட்ட அடி இன்றும்
புற்றெடுத்து புரையோடிக்கிடக்கிறது.
மருத்துவப் பெயராலே சிங்களத்தின் மரணப்பரிசுபெற்ற
சின்னப் பெண்ணுடல் சிதையேற்ற முடியாமல்
சீரழிந்து அலைகிறது.
ஆதிக்கக் கூப்பாடு அணுதினமும் ரணமாடி
அன்னையர் விழியேறிகண்ணீர்க் கடல் தோண்டுகையில்
பன்னீர்க்குளியலிட்டு பைந்தமிழ்க் கன்னியர்கள்
பக்குவமாய் உள்ளரென பாரெங்கும் பறையறைந்து
சங்கரி முதற்கொண்டு எட்டப்பச் சண்டாளர் சாட்சி சொல்வர்
நாங்களும் கேட்போம், திகைப்போம்...
பொய் என்று பொருமுவோம்.
பிறகொன்றும் செய்யமாட்டோம்.
மூலைக்குள் முடங்கி முகட்டு விட்டம் பார்ப்போம்
காலங்காலமாக இதுதானே நடக்கிறது.
நாளாந்த நகை மாற்றம். அலங்காரப் பொருட் தேட்டம்

தாயகத்தை விலத்திய தாயகமாய் உலவுகிறோம்.
கார்காலப் பொழுதுகளில் கன்னச் சிவப்பெழுதி
போர் மூண்ட பூமியின் பெருந்துயர்
மாற்றவெண்ணா.....மாதராய்முல்லைச் சிரிப்போடு
மிடுக்கோடு நடக்கிறோம்.
அக்கையும், தங்கையும் பக்கத்து வீட்டுப் படித்த தோழியும்
சீண்டும் பகை நடுவே.....
மானத்தை வேண்டி தினம்தினம் தீக்குளிக்கும் பொழுதுகளில்
வரு.....மானத்தைத் தருமென்றாலே
அதைப்பற்றிப் பேசுகிறோம்.
வாதையுற்ற இராணுவ வல்லுறவால் சீவன்விட்ட,

வலியுற்று மனம் நலிந்த பேதையான பெண்களுக்காய்
கோதையர்கள் தனியெழுந்து மேதினியை உலுக்கினோமா?
முக்காடு போட்டுக் கொண்டு பெண் என்னும்
முகம் தொலைத்து முடங்கி விட்டோம்.
துணிவிருந்தால் துயர் அகலும்.

எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.