வெள்ளி, 26 ஜனவரி, 2007

மானுடம் என்பது...



மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்ற வகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மூதாதையர் பூமியில், இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு, ஆயுத முனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் பூமித் திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்?
மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப் புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கைகுலுக்குகிறார்களே! மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?அல்லது புலம்பெயர்ந்து வாழும் எம்மினத்தின் தாயகப்பற்று பலவீனமாகி விட்டதா?
கந்தகம் விற்கும் கனவான் தேசங்களுக்கு கருகி சிதையும் எங்கள் இனத்தின் வலிதெரிய நியாயமில்லை. பேரம் பேசி விற்கும் ஆயுதவளங்கள் எங்கள் மண்ணில் நிறைக்கப்போகும் பிணக்குவியல்களைப்பற்றி விற்பனையாளர் அறிய ஆர்வப்படவா போகிறார்கள்?

இயற்கை எழில்கொஞ்சும் எங்கள் பூமியின் மரஞ்செடியெல்லாம் பரட்டையாக மெல்ல மெல்ல உயிர்ப்பைத் தொலைத்துக் கொண்டிருப்பது பற்றி….. எங்கள் தேசத்தின் மண்ணினை ஆய்வு செய்தால்..... அது தன்னுள் கலந்திருக்கும் கந்தக அமிலத்தின் கனதியைச் சொல்லுமென்பது எனக்கும், உனக்கும் மட்டும் தெரிந்தால் போதுமா?எப்போது உலகப்பரப்புகளில் சிங்கள இனவாதிகளுக்கு ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் கொடுக்காது நிறுத்தக்கோரி கிளர்ந்தெழப் போகிறோம்?
வடக்கிலும், கிழக்கிலும் தமிழினத்தின் மேல் போரையும், பொருளாதாரத் தடையையும் விதித்து சிறுகச் சிறுக எம்மினத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கும் இதேவேளை மற்றைய பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் களியாட்டங்களில் உண்மைகளை மூடிமறைத்து வேசம் போட்டு விவேகமாக வெளியுலகை நோக்கும் இலங்கை அரசின் முகமூடியை எப்போது கிழித்தெறியப் போகிறோம்?அரச பயங்கரவாதம் நிறைந்த நாட்டிடையே பெரும்பெரும் முதலீடுகளை செய்து எம்மினத்தின் அழிவுக்கு ஆதரவுத்தோள் கொடுக்கும் உண்மைநிலை புரியா அந்நிய அப்பாவித்தனங்களுக்கு எப்படிப் புரியவைத்து எம்மினத்தை பாதுகாக்கப் போகிறோம்?
பட்டிக்குள் அடைபட்ட மந்தைகளைப்போல் யாழ்குடாநாட்டிற்குள்ளும், வாகரைப் பிரதேசத்தினுள்ளும் மக்கள் அவலப்படும் இன்றையகாலங்கள் எப்படி உலகத்தின் கண்களுக்குத் தெரியாமல் போகிறதோ? உண்ண உணவின்றி ஒரு பிடி அரிசிகூட பெற வழியின்றி நஞ்சை உண்டு உயிரை மாய்த்த குடும்பம் உனக்கும், எனக்கும் சொன்னது என்ன? ஊர்ப்புதினமா?உக்கிரமான இராணுவ வக்கிரத்தின் மத்தியில் புசிக்க ஒருவாய் ஊணின்றி ஒட்டி உலர்ந்து சாவதைக் காட்டிலும் விசத்தை உண்டு உயிரை மாய்ப்பது விவேகம் என்பதையா? இது எதை உணர்த்துகிறது? புலம்பெயர் உறவுகளான எங்கள் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையை அல்லவா.. குறிப்பெடுத்துக் காட்டுகிறது.
களத்தில் நின்று எங்களைக்காக்க வீர்ப்புதல்வர்களும், “அதே சமயம் வெளிப்புலத்திருந்து எங்களைக் காக்க எங்களின் விடியலுக்காய் ஒவ்வொரு தேசத்தின் மனக்கதவங்களையும் திறந்து எங்கள் தேசத்தில் எங்களுடைய வாழ்வுக்கான அங்கிகாரத்தை வழங்கச் சொல்லி சிங்களத்தின் செருக்கடக்குவீர்கள் நீங்கள் உள்ளீர்கள்! நீங்கள் உள்ளீர்கள்!”
என்ற எம்மினத்தின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து விட்டோமா?
நீயும், நானும் நேற்றைய இரணங்களை மறந்துவிட்டோமா? கல்வியைப் பறிகொடுத்தோம், கட்டிளம் பருவத்தில் இராணுவக்கரங்களில் சிதைவுற்றோம், உறவுகள், அயலவர், கண்ணெதிரே துடித்திறந்த காட்சியெல்லாம் காலாவதியாகி நினைவு பதிவிலிருந்து காணாமல் போய்விட்டதா? ஷெல் தந்த தழும்புகளையும், குருதிச் சுற்றோட்டத்தில் குலவித்திரியும் கந்தகத் துகளையும் காலம் மறக்கடித்து விட்டதா? அல்லது புலம்பெயர் வாழ்வியல் தந்த சுகம் இருட்டுக்குள் தள்ளிவிட்டதா?
பட்டியில் அடைபட்ட விலங்குகளுக்குக் கூட உணவு போடுவார்கள் ஆனால்… எங்களினத்திற்கு?
இராணுவக் குண்டர்களுக்கு மத்தியில் அவர்களைக் காக்கும் கேடயமாக மாற்றப்பட்டிருக்கும் மக்களுக்கே உணவைத் தடை செய்யும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களை நானும் நீயுமாவது புறக்கணிக்கலாம் அல்லவா!எங்களின் இருப்பை, எங்களின் உறவுகளுக்கும், இந்த உலகத்திற்கும் உறுதிப்படுத்த வேண்டிய காலத்தில் நானும் நீயும் பயணிக்கிறோம். எங்களின் இருப்பு என்பது ஒருநாள் எழுச்சியல்ல… பெரும் தொடருந்தாய் நானும் நீயும் நகரவேண்டும். அடுத்தடுத்து சிறிலங்காவின் உற்பத்திப்பொருட்களுக்கும், உல்லாசப் பயணத்துறைக்கும், பாரிய முதலீடுகளுக்கும் தடைகளை உருவாக்கும் அதே நேரத்தில் இலங்கை வங்கிகளில் கிடக்கும் தமிழரின் பெரும் சேமிப்புப் பணங்களையும் மீளப்பெற்றும், சிறிலங்காவிற்கு பெரும்வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் எயர்லங்கா விமான சேவைகளைத் தவிர்ப்பதாலும் உலகளாவிய ரீதியில் சிங்கள அரசுக்கு தமிழர்களாகிய எங்களால் பாரிய தடையை உருவாக்கமுடியும். அதற்கான முன்னெடுப்பை நானும் நீயும்தான் உருவாக்க வேண்டும். எங்களின் இந்த செயற்பாட்டின் மூலம் புலம்பெயர் தமிழரின் விடுதலை வேட்கையின் கனதியை சிங்கள இனவாதம் மட்டுமல்ல எங்களின் அவலங்களை கணக்கெடுக்காமல் ஆயுதவளங்களை அள்ளி சிங்களத்திற்கு வழங்கும் அண்டை நாடுகளோடு அனைவருக்கும் ஈழத்தமிழினம் புரியவைக்க வேண்டும்.
என்ன… என்னினத்தின் விடியலின் ஒளிதேடி நான் இறங்கிவிட்டேன். நீ…… இன்னும் உறங்குகிறாயா?.... இல்லை உணர்வற்று எம்மினத்தை அழிக்கும் அரசுக்குச் சாமரம் வீசுகிறாயா? வா!..... என் பதில்போல் உன்பதிலும் தாயகமண்ணுக்கு தலைநிமிர்வைக் கொடுக்கட்டும்.

கருத்துகள் இல்லை: