ஞாயிறு, 9 டிசம்பர், 2007

எச்சரிக்கை மடல்


மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும்,
தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும்
தயவு செய்து மேற்கொண்டு,
இக்கவியின் இரத்த ஓடையை
இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்!

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்
தேசத்து ஆன்மா துடிக்கிறது.
நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது.

உந்தும் வலு உறுதியாக வேண்டும்.
ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம்
வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது.
பனிக்குடம் உடைந்தபின்,
முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால்
எல்லாமே உறைந்து போகும்., ......உலர்ந்தும் போகும்.

வலியின்றி வளர்ச்சி இல்லை.
வலுவின்றி வலியைச் சந்தித்தால்
பலவீனம் பாயில் கிடத்தும்.
வலுவினூடே வலியைச் சந்தித்தால்
நலிவு நாணி ஓடும்.

இருந்து வியாக்கியானம் பேசும் மணித்துளிகள்
வலி வளர்க்கும் வேறொன்றும் செய்யாது.
பந்தமாய் ஆவதற்குப் பலவீனம் வாசலோரம்
முண்டியடித்து நிற்கிறது.
அதை ஊளையிட்டு ஓடவைத்தல் என்பது
உந்தும் வேகத்தில் இருக்கிறது.

உயிர்ப்பின் வலியும், உயிர்ப்பின் ஒலியும்
பிறப்பின் வாசலிலே பின்னி நலிகிறது.
வலியை ஒழிப்பதும், ஒலியை வளர்ப்பதும்
எம் இருப்பின் இயல்பில் இறைத்துக் கிடக்கிறது.

உந்தூ!
இல்லாவிட்டால் மூச்சுத் திணறும்
இத்தனை காலம் எத்தனை இழந்து...
வளர்த்த திரு இது.

முந்நூறு நாள் வளர்ந்த முத்தல்ல,
60 ஆண்டுகளாய் அவதியுறும் வலியில்
தமிழினம் சுமந்த கருவில் வளர்ந்த தெய்வசிசு.

தெய்வ சிசுவின் பிறப்பையே மறுக்கும்
பிசாசுத்தனங்கள் புளுகுக்கதைகள் அல்ல - அவற்றை
நிசத்தில் நாமும் தரிசிக்கும் நிகழ்காலம் இது.

உலகும் வலுவை நோக்கியே தலைவணங்கும் என்பது

வரலாறுகள் உணர்த்தும் பாடம்.
எம் வலிக்கு மருந்து எம்கையில்,
மண்டியிட்டாலும் மாற்றார் எமக்குதவார்.

களமும், புலமும் கைகோர்த்தே...

உந்தும் பெருமூச்சை உருவாக்கவேண்டும்

வலுவும், வளமும் இணைவதில்
வரலாற்றின் கதவுகள் திறக்கும்.
எடுக்கும் கைகள் கொடுக்கப் பணிய,
உந்தும் வலு உச்சமடையும்.
பிறப்பின் வாசல் விரிவடைய
தெய்வத்திரு கண் விழிக்கும்.

இதற்குப் பின்னும் காலந்தாழ்த்தல்
என்னையும், உன்னையும் இழிவாக்கும்.

புரிவாயா?

ஞாயிறு, 2 டிசம்பர், 2007

கவிதையின் அரசே வாழீ! புதுவைப் புலவனின் அகவை 60


துள்ளிடும் வாலிபத்தால்
துணையற்று வெண்நரையும்,
வில்லிடும் நாவளத்தால்
வேதனை செய்விதியும்,
கள்ளிடும் கவின்பாவால்
காணாமல் போகட்டுமென
தள்ளி நிலம் வாழுகின்ற
தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது.

இருவயது மழலையாக
இதயத்தில் உலவு கவியே!
அறுபது அகவையய்யா
அகத்திலே பதியவில்லை.
ஆண்ட நின் புலமைகென்றால்
ஆயிரம் அகவை தாண்டும்.
பூண்ட மண்கோலத்திற்குள்
புதிர் கூடி நிற்குதய்யா!

தீரப் பெருங்கவியே! தீராத
மாவரம் தந்த துரோணக்குருவே!
ஏறுபோல் நிமிர்ந்த
எழுத்தின் வீரியமே!
கண் நூறு படுமய்யா!
கரிநாச் சொல்லிது.
காலடி மண்ணெடுத்துக்
கற்பூரச் சுடரிலே போட்டிடுக!

கூர்வடிவேலை ஆளும்
சுந்தரப் பேச்சும்,
வேரடி வீரம் ஊறும்
துல்லிய வீச்சும்,
பாரதைப் பணிய வைக்கும்
பைந்தமிழ் பாட்டும்,
ஊரடி உறவை அணைக்கும்
உயிர்ப்பின் ஊற்றும்,
வேரடித் தலைவி காக்க
வாழ்வாங்கு வாழ வாழீ!

மேதகு தலைவன் அருகே
தோள்தரும் ஞானகுருவாய்,
ஈழவள் விலங்கறுக்கும்
காலமது உரைக்கும் திருவாய்,
ஞாலமோடலையும் உறவின்
உணர்வுகள் இணைக்கும் கருவாய்,
வாழக்குடி ஈழம் வரவே
வந்தணைக்கும் அன்பின் செறிவாய்
காலநதி கடந்தும் வாழும்
கவிதையின் அரசே வாழீ!

திங்கள், 26 நவம்பர், 2007

தெய்வீக புருசர்களே!...நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா! துயர் துடைக்க வாருங்களேன்!


கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு
மீட்பர்களே!.....
நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம்.
பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டிபுன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள்.
நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்கஅஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்!
வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே!

காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம்.

கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும்
காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்!
கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத் தெரியவில்லை. எண்ணெடுத்து பார்க்கின்றோம். எத்தனை ஆயிரமர் மண்மடிக்குள் உரமானீர்!

பண்ணெடுத்து பாடிடவும், பருவகாலம்போல் மாவீரர் மலரடிக்கு மலர்தூவி வணங்கிடவும்
இவ் யென்மம் போதாதென இதயப்பூ கசிகிறது.

காலப் பெரு வெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் முகங்காட்டும் முறுவலரே!
ஆரத்தழுவி உங்கள் அன்பு சொல்லிச் சென்றபோதும்
ஊணுருகி, உயிர்கசிய உறுதி மொழிபேச.....
இந்த மாவீரர் கோட்டத்திற்கு மலரோடு வருவோமென்று கூறுகெட்ட மனம் குறிபுணர்ந்து கொள்ளலையே!

அம்மாவிடம் சுகம் சொல்லு!,
அப்பாவிடம் சுகம் சொல்லு!,
அண்ணாவிடம் சுகம் சொல்லு!,
அக்காளிடம் சுகம் சொல்லு!
எத்தனை சுகங்களை எம்மிடையே சொல்லிவிட்டு
கண்மலர்ந்த சிரிப்போடு கந்தகம் சுமந்து சென்றீர்.

வந்திடுவீர், வந்திடுவீர் என்றும்மை எதிர்பார்த்த
அம்மையும், அப்பனும் இன்றிங்கே வந்துளரே!
எழுந்து வந்து பேசய்யா! எழுந்து வந்து பேசம்மா!

தெய்வீக புருசர்களே!...
நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த
அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா!
துயர் துடைக்க வாருங்களேன்!

பால்மாச், சீனி, பனங்கட்டியும், அடிபட்டு உண்ட சொக்லேட் வகையும்,
அம்மா தந்த நிலாச் சோறும்,
அண்ணன் தம்பி உறவின் இறுக்கமும்
மெல்லென விசித்த உற்றார் உறவுகளும்
பாசச்சுழலில் கசிந்து கசிந்து உங்களைத் தேடி இங்கு வந்துளரே!
உன்னத தேவரே!
உங்கள் உறவுக்கொடிகளை அணைத்து தேற்றி ஆறுதல் வார்த்தை ஒருமுறை சொல்லி மறுபடி நீங்கள் உறங்குங்கள்!
கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப்பிடிக்கும் தொட்டாத் தொட்டும்
கொட்டும் மழையில் கப்பல்விட்ட
ஆசைத்தோழரும் இங்குளரே!
பள்ளிக்கூடப் பிரிந்த நட்பும்,
பருவத்தில் காதல் கொண்ட உறவும்
ஊர்பேர் அறியா உவந்த தோழரும் உருகித் தவிக்கிறார் பாருங்கள்!

ஒரு முறை வந்து திருமுகம் காட்டி
உருகும் தோழரின் உளத்தை தேற்றிவருகிறேன்
என்றொரு வார்த்தையைக் கூறி விதைகுழிகுள்ளே ஓய்வெடுங்கள்.

காலப் பெருவெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் வருவீர் என்றொரு நம்பிக்கை சுமந்து நாட்களைக் கடந்து நாம் செல்வோம்.
உருகிய பனியென, உணர்வுகள் அலையிட,
உறங்கும் உமக்கோர் உறுதி தந்தோம்.
எவ்வழி பற்றி எம்மிடை பிரிந்தீர்.
அவ்வழிபற்றி எம்நடை தொடர்வோம்.

சனி, 3 நவம்பர், 2007

தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே!


போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய
புன்னகை மன்னவனே!
தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய
சில்லென்ற நதிக்காற்றே!
ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான
இன்முகத் தமிழெ ழிலே!
பார் சுற்றி தாய் முற்றக் கதைசொல்லிப் பயணித்த
பண்புநிறை தமிழ்செல்வா!

உலகின்............
தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா,
நீ தூங்கிப் போய்விட்டாய்?
ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா,
நீ உறங்கி ஓய்வெடுத்தாய்?
நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா,
நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள்
நாயகனின் தோளான நல்லதொரு தோழனே!
நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்?

யார் குற்றம் செய்தோம்?
விழிநீர் முட்டிக் காயாத விதி வாங்கி உழல்கின்றோம்.
மதி மழுங்கிக் கூர்கெட்டு மனிதத்தின்
மௌனத்தில் உறைத்துக் கிடக்கிறது உலகம்.
சிகிலமாய் உடல் கிழித்து உயிர் குடித்து,
விண்ணேகும் வான்கழுகின் விதிகிழித்த கதைமறந்து,
வேதாளம் எம் மண்ணில் வேட்டைக்குத் திரிகிறது.

வான் கிழிக்கும் வல்கழுகை இனி
வரவிட்டு வீழ்த்தவேண்டும்.
பல்லிளிக்கும் சிங்களத்தின் பலம்
ஆய்ந்து சரிக்கவேண்டும்.
கூன் எங்கு இருக்கிறது
குறிப்பெடுத்துக் கண்டுபிடி!
குன்றாத திடமேற்றுக்
கொற்றவைக்குக் கொடியேற்று!

கண்மூடிக்கிடக்கும் திடல்தோள் தமிழா!
கடல்தாண்டிக் கிடக்கும் உன்
கண்களுக்குள் தீ ஏற்று!
படக்கடைக்கு செய்யென்று முதலீடு கேட்கவில்லை எம்படை களத்தில் முதலாக,
உன் பங்களிப்பைக் கொடு!

எடுகோள்கள் என்று எல்லாவற்றுக்கும்
பழங்கதைகள் சொல்லிப் பஞ்சாங்கம் சிலர் படிப்பர்.
விடு!, வேதனையின் மடி கிடந்து விதியென்று மடிகின்ற வெட்டித்தனமெல்லாம் வெந்தணலில் போட்டு எரி!

வாழ்விற்காய் தினமோடி வாழாமல் வேசமிடும்
வலி உனக்குள் பெருத்து வழி மறைத்து நிற்கிறது.
வையத்தில் பரவி வாழ்கின்ற தமிழினமே!
வாழ்விற்குள் என்ன கண்டாய்?
அல்லலுறும் அகதி வாழ்வு, அகவை பல தேய்ந்தாலும் இணையமுடியா உறவுத் தொடர்கள்,
இறப்புக்குக் கூட உந்தன் வாழ்வில்
இரவல் நிலத்து இறுதிப் பயணம், மிச்சமென்ன?

குந்தி நீ கொண்டாடும் குடிநிலமே, - உன்னை
வந்தேறு குடியென்றே வரைவெழுதி வைக்கும்.

துணி!சொந்தநிலம் மீட்க வேண்டும்.
சோகத்தின் மூச்சுகளில் தேசத்தீ கனலவேண்டும்.
வந்து வணங்கிநின்று வீரப்புதல்வர்கட்கு 'bye' காட்டி, போவதெல்லாம் இந்த மணித்துளியே
இழிவென்று தூக்கி எறி!

எந்த மண்ணிலே இவர் தூக்கம் கொண்டனரோ..,
எந்த மண்ணிலே எழுபரிதி தெரிகிறதோ!
அந்தமண் மீட்க அத்தனையும் நீ வழங்கு!
அப்போதே மறைந்த இம்மாவீரர் மனம் சாந்தி கொள்ளும்.

வெள்ளி, 2 நவம்பர், 2007

போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!



போர் முற்றம் நின்று

பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!

யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்

கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.

கண்களில் கசிகின்றோம்.

காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்

கனலாய் பிறப்பெடுப்போம்.




பிரிகேட் சுப.தமிழ்ச் செல்வனுடன் மாவீரர்களான சகபோராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.

புதன், 24 அக்டோபர், 2007

புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி


காலப் பெரு வெளியில் - ஈழக்
கதை எழுதும் இளைய தேவரீரே!

தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை
தரணிக்கு விட்டுச்சென்ற தமிழ்மானப் புதல்வர்களே!

வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு
உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே!

கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும்,
இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும்
சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும்.

நீங்கள்
இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும்,
இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது.

வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து,
விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர்.

இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங்களச் செழுங்கவியும் - உம் சிறப்பெடுத்துப் பாட, அவர் சந்ததிக்கும் காப்புத் தந்து, சாவணைத்துப் போனீர்கள்.

விலைபோகாத் திருமகனின் வீரப்புதல்வர்களே!
வான் கிழிக்கும் வல்லரக்கர் வடிவுடைத்துப் போட்டு,
மனக்கூன் நிமிர்த்தி, மறவேங்கை மௌனம் கலைத்து,
வலுவூட்டி வளியானீர்! வரலாற்றுத் திருவானீர்!

இனி
இதுகாலம் பிணங்குவித்த இயந்திரக் கழுகுபல
இடிந்துதிர்ந்த ஒலி, உலகின் கேளாச்செவிகளுக்கு கேட்டதென்று ஓலை வரும்

கையெடுத்துக் குலுக்கியும், கனிமுகம் காட்டியும்,
எழுதீயின் கனம் தணிக்க கட்டாயம் பலர் வருவர்.

கலிமீது கலிதூவி தமிழர் வாழ்வெங்கும் வலிதூவும் வல்லபல அரசுகளும் வாசலிலே வந்திளிக்கும்.

அரங்கிற்கு மறைவாக ஆயதவளங் கொடுத்தோரும் - தம் சிரங்கு முகம் மறைத்து சிறப்பாய்வு செய்ய வருவர்.

புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி - இது
பொல்லாத இனவாதம் பொறி கலங்கும் முதற்படி.

இதயத்தின் மத்தியிலே இடிவிழுந்து கிடக்கும் இலங்கைக்கு இனித்தான் முடிவுரை.
இதுவே சுதந்திர ஈழத்தின் முகவுரை.

வியாழன், 27 செப்டம்பர், 2007

சாத்வீகச் சின்னம்


கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று செய்தவன்
செத்து நின்ற இந்தியத்தை
முத்தமிட்டு நின்றவன்
பித்தம் கொண்ட வல்லரசைப்
பேதலிக்க வைத்தவன்
கத்தும் கடல் சூழ்ந்திருந்த
காசினியில் உதித்தவன்

வேலவனின் காலடியில் - தமிழ்
வேதனைகள் சொன்னவன்
காலனையும் இங்கிருத்திக்
கதைகள் பல கேட்டவன்
ஞாலமிங்கு தலைகுனியும்
கோலமதில் வென்றவன்
காலமது பார்த்துத் தன்
காரியத்தைச் செய்தவன்

வேங்கையரின் பாதையிலே இவன்
வெகுண்டெழுந்த சன்னம் - இன
வேதனையைத் தான் சுமந்த
சாத்வீகச் சின்னம்
காந்தியவர் மண்டியிடும்
காவியம் இவன் திண்ணம்
காய்ந்த இவன் நா உதிர்த்த
வார்த்தை இனி மின்னும்.