வெள்ளி, 12 ஜூன், 2009

யார் செய்த சூழ்ச்சி இது?




யார் செய்த சூழ்ச்சி இது?
ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா?
அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா?
தமிழர் கூட்டத்தின் தறுதலைகள் விரோதமா?
தவறிழைத்து விட்டது நோர்வேயின் ஆட்டமா?

ஆலமரம் ஒன்று அடிசாய்ந்து போனது
பாழும் சேதி காதில் பாதரசம் வார்த்தது.
பல்லாயிரம் உயிர் தின்று பெருங்கூட்டு வென்றது.
பணிந்த புலி உயிரறுப்பில் பாரதமும் நின்றது

நந்திக் கடலோரம் மனித நேயம் நொந்தது.
நடேசன் என்ற எங்கள் சாந்த நிலா வெந்தது.
வல்லரசுச் சதிகள் எங்கள் வாழ்வள்ளித் தின்றது.
வெள்ளரசுப் புதல்வரிடம் வெள்ளைக் கொடி தோற்றது.

ஐ.நாவின் அரியணையில் நீதி செத்துப் போனது.
அம்பலத்தில் ஏற்றி வைத்து சாந்தநிலா பறிபோனது.
சொல்நெறிகள் பிறழ்ந்து சூதும், தீதும் வென்றன.
முள்ளி வாய்க்கால் கொள்ளிடத்தில் மூச்சுநின்று போனது.

மானிடத் திருபோர்த்திய மாவரக்கர் கூட்டத்தின் முன்
வெள்ளைக் கொடி பிடித்தீர்களே? வெந்தது எம் இதயமய்யா.
மண்ணளவு கூட போர் மரபு அறியாத மாக்களிடா..
மாவீரர்களே! நீங்கள் பணிந்தீர்கள்?

கள்ளநோக்கோடு கரவேந்திக் கிடக்கின்ற
பாரதப் பேய்களிடமா பணிதற்கு பாதை கேட்டீர்கள்?
வல்லமை சுமந்த எம் வாழ்வுக்குக் குழி பறித்த
நோர்வே கொல்லனிடமா இனத்தைக் காக்கவென
உமையழிக்கும் வழி கேட்டீர்கள்?

ஐ.நா தலைமை நம்பி முதன்மை செயலரை நம்பி
ஆயுதத்தை மௌனித்து அழிக்கப்பட்டு விட்டீர்களே!
அய்யா...
நம்பி மெய்யற்ற உலகிடம் மெய்யழிந்து போனீர்களே.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
பொல்லாத உலகிடமா
இல்லாத மானிடத்தை இருப்பதாய் தோற்றீர்கள்?

உங்கள் உயிர்களை உவிந்து குடித்தபின்னும்…
அடங்காத சிங்களத்தின் வதைகளிலே
வெந்து சாகுதய்யா வீரத்தின் குடிகளெல்லாம்.

அல்லக்கை நாடாகி அனைத்துலகும்
சிங்களச் செக்கனின் சீரடியைத் தடவுதய்யா.
நொந்து கிடக்கிறோம்.
நோய் கொண்டு துடிக்கிறோம்.

இந்த வலி தீராது.
சொந்த நிலம் மீட்கும்வரை சொர்க்க வாசல் திறக்காது.
நந்திக் கடலோரம் மூச்சடக்கிச் செத்தோரின்
அந்தரத்து ஆத்மாக்கள் சிந்தையிலே வாழும்வரை
இந்த வலி தீராது.

வெள்ளைக் கொடி எங்கள் வேதனையைத் தீர்க்கவில்லை.
மௌனத்தின் அர்த்தங்கள் மாக்களுக்குப் புரியவில்லை.
கொள்ளை நோய் வந்ததாய் எம் குறி கெட்டுப்போகாது.
கொடும் பகையை உடைத்து மண்ணை மீட்கும் வரை ஓயாது.

நந்திக்கடலோரம் வந்திறங்கி நிற்போரே!
நலமெடுத்து அனுப்பி வைக்கும் நாள் வரும்.
அதுவரை…….,

நாம் ஓயும் காலமல்ல…
நாம் ஓயப்போவதில்லை.
மானுடத்தின் கண் திறக்க மாபெரும் யாகம் செய்வோம்.
புன்னரி நாய்கள் வந்து புலி அழிக்க முடியாதென்று - எதிரி
புற்றெடுத்து நோகும் வரை புலமிருந்தும் இருப்புரைப்போம்.

காலப் பெருவெளிகள் கதைகள் நூறு புனையலாம்
கலங்காப் பெருமனமும் கதறி அழுது சோரலாம்
ஸ்தூல உடல் வாதையுற தேவ உயிர் போகலாம்
அணையாப் பெருவிளக்கின் சோதி கூட மாயலாம்.

நாம் ஓயும் காலமல்ல
நாம் ஓயப் போவதில்லை.
புன்னரி நாய்கள் வந்து புலி அழிக்க முடியாதென்று - எதிரி
புற்றெடுத்து நோகும் வரை புலமிருந்தும் இருப்புரைப்போம்.

2 கருத்துகள்:

வரவனையான் சொன்னது…

"புன்னரி நாய்கள் வந்து புலி அழிக்க முடியாதென்று - எதிரி
புற்றெடுத்து நோகும் வரை புலமிருந்தும் இருப்புரைப்போம்."

உண்மையான வரிகள் சகோதரி

வல்வை சகாறா சொன்னது…

நன்றி வரவனையான்.