வெள்ளி, 11 ஏப்ரல், 2008

நேசிப்பின் நிலாவரையல்ல.. நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை.


கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே
தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய்
அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின்
நெடுங்காலத் திட்டமதில்
மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி

பரம்பொருளே!....
தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்?

இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம்.
சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி,
கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம்
கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே?

ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை
ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின்
மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது

மானுட புதைகுழிமேல் மல்லாக்கும் ஓணான்களே!
சாணாடா?, முழமாடா சாவுக்கு இருக்கிறது?
ஏவுகணை முதல் எல்லா பரீட்சையையும்
எங்கள் மண்ணிலே கந்தகத்தால் எழுதுங்கள்.
காலன்தான் எங்கள் கண்ணெதிரே தெரிகிறானே.

கார்காலம், கனத்தமழை, போர்த்தெழுந்த பெருவெள்ளம்
சேறேற்றி புதைக்கிறது சனத்தை...
போர்வாழ்வு ஒரு பக்கம், பொல்லாத உலகத்தின்
சுண்ணாம்புத் துப்பல்கள் சுவாசத்தின் மறுபக்கம்.
பாரெங்கும் நிமிர்தெழும் பனங்கூடல்களே!
வேர்மடியின் உடலெங்கும் பரந்தோடி உறைகிறது ரத்தாறு,
உயிர் கரைக்கும் வாசகங்கள் எவருக்கு வேண்டும் சொல்!

நாளாந்த மரணமல்ல, நாழிகையே மரணமென
சாவாழ்வு சரசமிட, பாதாள நரகமடா பைந்தமிழ் வாழ்வு
தாளாத வீரமடா தாங்கி நிற்கிறது.
தமிழ் மகவே!... உயிர் அகவே!
தேம்பாதே! தேங்காதே!...
விரி திசையின் மையத்தை தாங்கு!

நேசிப்பின் நிலாவரையல்ல...
நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத் தேவை.

கருத்துகள் இல்லை: