செவ்வாய், 25 நவம்பர், 2008

வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே!




காரிருள் போர்த்தி நிலம்
கண்விழித்துக் காத்திருக்க,

கறுப்பு முகில் தான்கவிந்து
காணவென்று பூத்திருக்க,

ஆழிமகள் அணைக்கவென்று
ஆர்ப்பரித்து அலை எறிய,

வந்துதித்த ஆதவனே!
வாழிய நீ பல்லாண்டு.

புற்றீசல் மெட்டெடுத்துப்
புதுப்பாடல் இசைத்திருக்க,

புவி நனைத்து வர்ணமகன்
பன்னீரை வார்த்திருக்க,

நறுமலர்கள் வாடாத
நனிதிங்கள் கார்த்திகையில்

பிறப்பெடுத்த பெருமகனே!
வாழிய நீ பல்லாண்டு.

கிழக்கு முகம் சிரிக்க
எழும் ஒளியின் அடர்வே!

செம் பொன் அள்ளி
வீசிவரும் சூரியச்சுடரே!

இலக்கெடுத்துச் சுயம்
ஒடுக்கும் மானிடத்திருவே!

இலங்குபுகழ் தலைமகனாய்
வாழிய நீ பல்லாண்டு.

தாயகத்தை நெஞ்சில்
ஏற்ற தலைமைவேளே!

தனித்துவப் பண்பாட்டு
ஒழுக்கநெறிக் கோவே!

வாயோதும் நாமம் உறை
வல்லவர் வடிவே!

வரும் பகை வென்று,
வாழிய நீ பல்லாண்டு.

சீர் பூத்த படைசெய்யும்
சிருஸ்டி பிரம்மனே!

சின்னச் செம்மழலை
சிரம் காக்கும் தேவனே!

ஊழிப் பகை அழிக்கும்
உக்கிரச் சிவனே!

உலமெலாம் உனை வாழ்த்த
வாழிய நீ பல்லாண்டு.

வீரத்தின் வனப்பிற்கு
உவமை தந்த வரலாறே!

வாழ்வெடுத்துத் தமிழ் நிமிர
வழி சமைத்த வல்லமையே!

காலமகள் எமக்களித்த
காவியப் பெருந்தேவே!

கவி நெய்து வாழ்த்துகிறோம்
வாழிய நீ பல்லாண்டு.

கருத்துகள் இல்லை: