சனி, 24 மே, 2008

ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன்


ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும்,
அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும்,
போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும்,
எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும்,
இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது?

புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும்,
புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும்,
இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும்
இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது?

ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத
என் இதயம்....
இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது?

அன்னை மண்ணிலே குருதியாறுகள்
காயவில்லையே, உறையவில்லையே...
இலக்கெடுத்த நம் தாயின் வேதனை
ஆறவில்லையே,.. அழியவில்லையே...

வழக்கெடுத்தவன் காலனா உன்னிடம்...
என்ன விளக்கக் குறைவோ..
இறைவா!..
உன் விசமத்திற்கு அளவிலையோ?

கந்தகம் சரிக்காத களவீரனை,
செந்தமிழ் ஈழத்தின் சமர் வேந்தனை,
எந்தநேரம் பார்த்து எமைவிட்டுப் பறித்தாய்?
சிங்களம் ஏவிடும் பேய்களின் கைகளில்
தங்கமண் தவித்திடும் தருணத்தில் அல்லவா!
பைந்தமிழ் ஈழத்தின் பிரசவக் குருதியில்
எங்களர் அனைவரும் நனையும் கணத்திலல்லவா!

இறைவா!... ஈழக்கருவறையைக்
காத்து வளர்த்தவனை காவெடுத்து விட்டாயே!
பார்த்தவன் கண்பனிக்க, கையெடுத்து முத்தமிட
சேர்க்க மனமின்றி இடைபிரித்த வஞ்சகன் நீ!

அண்ணனே!...... பால்ராஜ் எனும் அற்புத வீரனே!
அந்தகாரம் உனைச் சூழ்ந்ததெப்படி?
உன் உதிரப்பூ உறைந்தது எங்ஙனம்?

எதிரியைப் பொருதும் களங்களெல்லாம்
உன்பேர் உச்சரிக்குமே!
எதிரியை எச்சரிக்குமே!
வரும் பகை காலூடே வடிக்கின்ற நீர்த்துளிகள்
உன் தீரம் பெரிதுரைக்குமே!
திசையெங்கும் எதிரொலிக்குமே!

உன் உறுதி வாகை சூட,
அணங்குதமிழும்,
அன்னை நிலமும் மதர்ப்புடன் நிமிர்வரே!
மார்தட்டி தம் மகவின் மிளிர்வில் மகிழ்வரே!
இனி எப்போதய்யா?
இனி எப்போதய்யா?

உன் செல்லமொழி கேட்க அன்னை தமிழாளும்,
தவழ்ந்து தாவினும், தடுக்கி விழுந்தாலும் தாங்கும் நிலமகளும்,
ஆருக்கு ஆரென்று ஆறுதலைச் சொல்வரோ?

அணைத்து அருகமர்த்தி அன்புரைக்கும் அண்ணனும்,
அரவணைத்து நீ வளர்த்த தீரமிகு தம்பியரும்,
தனித்து போயினரே அய்யா!
தமிழீழ தேசமே தேற்றுவார் இன்றித் தேம்பிக் கிடக்கிறதே.

கந்தகத்தால் உனை காவு கொள்ள முடியாக் காலன்
உன் செங்குருதிப் பூமீது பாசக்கயிரெய்து,
மெய்விட்டு உயிர்ப்பூப் பறித்து
எம்மினத்தின் கை எடுத்துப் போனானோ? - அய்யா
எம்மினத்தின் நம்பிக்கை எடுத்துப்போனானோ?

இன்னும் முடிவெய்யவில்லையே....
தாயகத்தின் விலங்குடையவில்லையே...
ஆராரோ வந்து ஆயுதமும் கொடுத்து
எம் தாயின் பேச்சிறுக்கி,
மூச்சிறுக்கி...
ஆய்கினைகள் செய்திருக்க...
காக்க என்று பிறப்பெடுத்த காவல்வேளே!
காலனை இழுத்துக் கன்னத்தில் அறையாமல்
கைகோர்த்து அவனோடு கவலையின்றிச் சென்றனையோ?

ஆற்றுவார் இன்றி அரற்றுகிறோம் அண்ணலே!
தோற்றமாகாளிகூட தொய்ந்தழுது நிற்கின்றாள்.
கூற்றுவ கூத்தொன்று அரங்கேறி ஆடுதற்கு
வேற்றுவர் வன்னிமையின் வாசலிலே அலைகின்றர்.

அண்ணலே!.... நீ வளர்த்த வலியோரின் அகத்தில்
ஆணையிட்டு வழிநடத்த நீ வருவாய்;! நீ வருவாய்!
இலக்கொன்று பாதியென்று இலங்கும் நிலை உடைக்க
கட்டாயம் புரியாத வடிவிலே களத்திலே நீ வருவாய்!
இது தாய் மீட்கும் போர் வெளி....
அண்ணனைத் தனித்துவிட எண்ணாத உன் ஆவி
நிட்சயம் காக்கும்.
தாய் மண்ணை மீட்கும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அண்ணே! நல்ல பதிவு

வல்வை சகாறா சொன்னது…

நன்றி தம்பி... தங்கை