
துள்ளிடும் வாலிபத்தால்
துணையற்று வெண்நரையும்,
வில்லிடும் நாவளத்தால்
வேதனை செய்விதியும்,
கள்ளிடும் கவின்பாவால்
காணாமல் போகட்டுமென
தள்ளி நிலம் வாழுகின்ற
தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது.
இருவயது மழலையாக
இதயத்தில் உலவு கவியே!
அறுபது அகவையய்யா
அகத்திலே பதியவில்லை.
ஆண்ட நின் புலமைகென்றால்
ஆயிரம் அகவை தாண்டும்.
பூண்ட மண்கோலத்திற்குள்
புதிர் கூடி நிற்குதய்யா!
தீரப் பெருங்கவியே! தீராத
மாவரம் தந்த துரோணக்குருவே!
ஏறுபோல் நிமிர்ந்த
எழுத்தின் வீரியமே!
கண் நூறு படுமய்யா!
கரிநாச் சொல்லிது.
காலடி மண்ணெடுத்துக்
கற்பூரச் சுடரிலே போட்டிடுக!
கூர்வடிவேலை ஆளும்
சுந்தரப் பேச்சும்,
வேரடி வீரம் ஊறும்
துல்லிய வீச்சும்,
பாரதைப் பணிய வைக்கும்
பைந்தமிழ் பாட்டும்,
ஊரடி உறவை அணைக்கும்
உயிர்ப்பின் ஊற்றும்,
வேரடித் தலைவி காக்க
வாழ்வாங்கு வாழ வாழீ!
மேதகு தலைவன் அருகே
தோள்தரும் ஞானகுருவாய்,
ஈழவள் விலங்கறுக்கும்
காலமது உரைக்கும் திருவாய்,
ஞாலமோடலையும் உறவின்
உணர்வுகள் இணைக்கும் கருவாய்,
வாழக்குடி ஈழம் வரவே
வந்தணைக்கும் அன்பின் செறிவாய்
காலநதி கடந்தும் வாழும்
கவிதையின் அரசே வாழீ!
2 கருத்துகள்:
//மேதகு தலைவன் அருகே
தோள்தரும் ஞானகுருவாய்,
ஈழவள் விலங்கறுக்கும்
காலமது உரைக்கும் திருவாய்,
ஞாலமோடலையும் உறவின்
உணர்வுகள் இணைக்கும் கருவாய்,
வாழக்குடி ஈழம் வரவே
வந்தணைக்கும் அன்பின் செறிவாய்
காலநதி கடந்தும் வாழும்
கவிதையின் அரசே வாழீ!//
சிறப்பான வரிகள்.
நன்றி!
நன்றி அருண்
கருத்துரையிடுக