திங்கள், 26 நவம்பர், 2007

தெய்வீக புருசர்களே!...நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா! துயர் துடைக்க வாருங்களேன்!


கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு
மீட்பர்களே!.....
நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம்.
பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டிபுன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள்.
நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்கஅஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்!
வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே!

காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம்.

கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும்
காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்!
கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத் தெரியவில்லை. எண்ணெடுத்து பார்க்கின்றோம். எத்தனை ஆயிரமர் மண்மடிக்குள் உரமானீர்!

பண்ணெடுத்து பாடிடவும், பருவகாலம்போல் மாவீரர் மலரடிக்கு மலர்தூவி வணங்கிடவும்
இவ் யென்மம் போதாதென இதயப்பூ கசிகிறது.

காலப் பெரு வெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் முகங்காட்டும் முறுவலரே!
ஆரத்தழுவி உங்கள் அன்பு சொல்லிச் சென்றபோதும்
ஊணுருகி, உயிர்கசிய உறுதி மொழிபேச.....
இந்த மாவீரர் கோட்டத்திற்கு மலரோடு வருவோமென்று கூறுகெட்ட மனம் குறிபுணர்ந்து கொள்ளலையே!

அம்மாவிடம் சுகம் சொல்லு!,
அப்பாவிடம் சுகம் சொல்லு!,
அண்ணாவிடம் சுகம் சொல்லு!,
அக்காளிடம் சுகம் சொல்லு!
எத்தனை சுகங்களை எம்மிடையே சொல்லிவிட்டு
கண்மலர்ந்த சிரிப்போடு கந்தகம் சுமந்து சென்றீர்.

வந்திடுவீர், வந்திடுவீர் என்றும்மை எதிர்பார்த்த
அம்மையும், அப்பனும் இன்றிங்கே வந்துளரே!
எழுந்து வந்து பேசய்யா! எழுந்து வந்து பேசம்மா!

தெய்வீக புருசர்களே!...
நீங்கள் தவழ்ந்தும், தாவியும் விளையாடி மகிழ்ந்த
அமிழ்த மடியும், அன்பீந்த தோளும் துவண்டு நிற்குதய்யா!
துயர் துடைக்க வாருங்களேன்!

பால்மாச், சீனி, பனங்கட்டியும், அடிபட்டு உண்ட சொக்லேட் வகையும்,
அம்மா தந்த நிலாச் சோறும்,
அண்ணன் தம்பி உறவின் இறுக்கமும்
மெல்லென விசித்த உற்றார் உறவுகளும்
பாசச்சுழலில் கசிந்து கசிந்து உங்களைத் தேடி இங்கு வந்துளரே!
உன்னத தேவரே!
உங்கள் உறவுக்கொடிகளை அணைத்து தேற்றி ஆறுதல் வார்த்தை ஒருமுறை சொல்லி மறுபடி நீங்கள் உறங்குங்கள்!
கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,
எட்டிப்பிடிக்கும் தொட்டாத் தொட்டும்
கொட்டும் மழையில் கப்பல்விட்ட
ஆசைத்தோழரும் இங்குளரே!
பள்ளிக்கூடப் பிரிந்த நட்பும்,
பருவத்தில் காதல் கொண்ட உறவும்
ஊர்பேர் அறியா உவந்த தோழரும் உருகித் தவிக்கிறார் பாருங்கள்!

ஒரு முறை வந்து திருமுகம் காட்டி
உருகும் தோழரின் உளத்தை தேற்றிவருகிறேன்
என்றொரு வார்த்தையைக் கூறி விதைகுழிகுள்ளே ஓய்வெடுங்கள்.

காலப் பெருவெளியில், கார்த்திகைப் பேரொளியில்,
ஆர்த்தெழும் மூச்சின் வளியில் வருவீர் என்றொரு நம்பிக்கை சுமந்து நாட்களைக் கடந்து நாம் செல்வோம்.
உருகிய பனியென, உணர்வுகள் அலையிட,
உறங்கும் உமக்கோர் உறுதி தந்தோம்.
எவ்வழி பற்றி எம்மிடை பிரிந்தீர்.
அவ்வழிபற்றி எம்நடை தொடர்வோம்.

சனி, 3 நவம்பர், 2007

தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே!


போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய
புன்னகை மன்னவனே!
தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய
சில்லென்ற நதிக்காற்றே!
ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான
இன்முகத் தமிழெ ழிலே!
பார் சுற்றி தாய் முற்றக் கதைசொல்லிப் பயணித்த
பண்புநிறை தமிழ்செல்வா!

உலகின்............
தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா,
நீ தூங்கிப் போய்விட்டாய்?
ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா,
நீ உறங்கி ஓய்வெடுத்தாய்?
நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா,
நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள்
நாயகனின் தோளான நல்லதொரு தோழனே!
நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்?

யார் குற்றம் செய்தோம்?
விழிநீர் முட்டிக் காயாத விதி வாங்கி உழல்கின்றோம்.
மதி மழுங்கிக் கூர்கெட்டு மனிதத்தின்
மௌனத்தில் உறைத்துக் கிடக்கிறது உலகம்.
சிகிலமாய் உடல் கிழித்து உயிர் குடித்து,
விண்ணேகும் வான்கழுகின் விதிகிழித்த கதைமறந்து,
வேதாளம் எம் மண்ணில் வேட்டைக்குத் திரிகிறது.

வான் கிழிக்கும் வல்கழுகை இனி
வரவிட்டு வீழ்த்தவேண்டும்.
பல்லிளிக்கும் சிங்களத்தின் பலம்
ஆய்ந்து சரிக்கவேண்டும்.
கூன் எங்கு இருக்கிறது
குறிப்பெடுத்துக் கண்டுபிடி!
குன்றாத திடமேற்றுக்
கொற்றவைக்குக் கொடியேற்று!

கண்மூடிக்கிடக்கும் திடல்தோள் தமிழா!
கடல்தாண்டிக் கிடக்கும் உன்
கண்களுக்குள் தீ ஏற்று!
படக்கடைக்கு செய்யென்று முதலீடு கேட்கவில்லை எம்படை களத்தில் முதலாக,
உன் பங்களிப்பைக் கொடு!

எடுகோள்கள் என்று எல்லாவற்றுக்கும்
பழங்கதைகள் சொல்லிப் பஞ்சாங்கம் சிலர் படிப்பர்.
விடு!, வேதனையின் மடி கிடந்து விதியென்று மடிகின்ற வெட்டித்தனமெல்லாம் வெந்தணலில் போட்டு எரி!

வாழ்விற்காய் தினமோடி வாழாமல் வேசமிடும்
வலி உனக்குள் பெருத்து வழி மறைத்து நிற்கிறது.
வையத்தில் பரவி வாழ்கின்ற தமிழினமே!
வாழ்விற்குள் என்ன கண்டாய்?
அல்லலுறும் அகதி வாழ்வு, அகவை பல தேய்ந்தாலும் இணையமுடியா உறவுத் தொடர்கள்,
இறப்புக்குக் கூட உந்தன் வாழ்வில்
இரவல் நிலத்து இறுதிப் பயணம், மிச்சமென்ன?

குந்தி நீ கொண்டாடும் குடிநிலமே, - உன்னை
வந்தேறு குடியென்றே வரைவெழுதி வைக்கும்.

துணி!சொந்தநிலம் மீட்க வேண்டும்.
சோகத்தின் மூச்சுகளில் தேசத்தீ கனலவேண்டும்.
வந்து வணங்கிநின்று வீரப்புதல்வர்கட்கு 'bye' காட்டி, போவதெல்லாம் இந்த மணித்துளியே
இழிவென்று தூக்கி எறி!

எந்த மண்ணிலே இவர் தூக்கம் கொண்டனரோ..,
எந்த மண்ணிலே எழுபரிதி தெரிகிறதோ!
அந்தமண் மீட்க அத்தனையும் நீ வழங்கு!
அப்போதே மறைந்த இம்மாவீரர் மனம் சாந்தி கொள்ளும்.

வெள்ளி, 2 நவம்பர், 2007

போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!



போர் முற்றம் நின்று

பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!

யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்

கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.

கண்களில் கசிகின்றோம்.

காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்

கனலாய் பிறப்பெடுப்போம்.




பிரிகேட் சுப.தமிழ்ச் செல்வனுடன் மாவீரர்களான சகபோராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.