திங்கள், 2 பிப்ரவரி, 2009

தென்னகம் தந்த காலப்பிழம்பு.




மண் தவப்பேறே!
மானுடத் திருவே!
விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே!
தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே!
தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே!
என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில்
உன்னடி நோக்கி என்தலை வணங்கும்.


உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய்,
கண்டு கொண்டோம்.

கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை
நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய்.

எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே!
தொப்புள் கொடியின் தாய்மைப் போரில்
உத்தம தத்துவம் சொன்னவனே!
நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து
நியாயம் கேட்ட நீதிமானே!

நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும்.


ஈழவர் வாழ்விற்கு
இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா!
எத்தனை ஆயிரம் தோழரைத் தந்தாய்.
உண்மையின் வடிவை உணர்ந்திடச் செய்தாய்.
நாங்கள் பாயிரம் பாடும் ஆலயக் கோட்டத்தில்
குடிபுகுந்த குட்டித் தேவனே!
உனைச் செத்ததாய் சொன்னர்.
சா உனக்கில்லை நீ சரித்திரம் அல்லவா.