ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா?

இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை
ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின்
செவிப்பரைகளில் மோதி மோதி
இந்து சமுத்திரத்தில்,
ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில்
குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை
உரைத்துரைத்து ஓய்ந்து போனது.

கண் மறைந்து போன கால நீட்சியில்
கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும்,
கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல்
நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது.

வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை,
வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று.
தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று.

நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள்
ஊதிச் செல்கிறது காலக்காற்று
காலநீட்சியில் நீளும் கோலங்களில்,
கண்ணீரின் உலர்ச்சியை எழுதியபடியே
பூமிக்கரியம் புலன்களை உலுக்கிறது.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள்
எங்கள் மூச்சுக் காற்றைத் தவிர
அத்தனையையும் அள்ளிச் சென்று ஆறு மாதங்கள் கடந்தாயிற்று,
எனினும் அவலம் ஆறவில்லை, ஆற்றப்படவுமில்லை
முன்னரைக் காட்டிலும்,
மூச்சின் உணர்வில் வெம்மை அதிகரித்துக் கிடக்கிறது.

இன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்
ஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்
விற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற
எங்களைப் பார்க்கப் பஞ்சிப்படுகிறது.
இருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.

மீட்பின் தேடல் ஓயாதவரைக்கும்
நித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.
ஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்
தேடுவதற்கும் அனுமதியற்று அவலமுறினும்
உயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.

காட்சி மாறி விட்டது.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும் என்று
அன்றொருநாட் சொன்னதுபோல் சம்பவத் தொடர்கள்
ஆரம்பக் கோட்டுக்குள் ஆயத்தமாகி விட்டன.
எலுமிச்சை எடுத்து எல்லோரும் ஒரு முறை
உச்சந்தலைகளில் உரசிக் கொள்ளுங்கள்.
போதைக்கான மருத்துவம் அல்ல பித்தத்திற்கான வைத்தியம்.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,
வணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,
அன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்
இருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்
பட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும்.

வியாழன், 3 டிசம்பர், 2009

ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும்பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்



முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் வியன்னா பல்கலைக்கழகம்,பரணி கிருஸ்ணரஜனி பாரிஸ் பல்கலைக்கழகம், யாழினி ரவிச்சந்திரன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், சித்ரலேகா துஸ்யந்தன் வியன்னா பல்கலைக்கழகம், பிரியதர்சினி சற்குணவடிவேல் பர்சிலோனா பல்கலைக்கழகம் ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு “ஈழம்ஈநியூஸ்” க்கு தந்த பிரத்தியேகமான நேர்காணல் இது.

என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும்பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்
என்று தமது அண்மைய ஆய்வு ஒன்றில் வலியுறுத்தியிருக்கும் இவர்கள், அக்கருதுகோள் குறித்து இந் நேர்காணலில் மீண்டும் வலியுறுத்திப் பேசுவதுடன் அதை ஒரு இயக்கமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.
புலிகளின் பின்னடைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒரு விபரீதமான சூழலில் அக்கருத்துக்களை ஒற்றையான தட்டையான பன்முகப் பார்வையற்ற காழ்ப்புக்களும் குரோதங்களும் நிறைந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களின் வெறும் உளறல்கள் என்று அவற்றைப் புறந்தள்ளும் இவ் ஆய்வாளர் குழு, தனி மனித வழிபாடு

தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை இந் நேர்காணலில் துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்து காட்டுகிறார்கள்.

பிரபாகரன் தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பது இவர்களின் மேலதிக வாதமாக இருக்கிறது.

இந் நேர்காணலில் இருந்து தமிழ்சமூகத்திற்குக் கிடைத்த முக்கியமான முடிவாக நாம் இவற்றை கருதுகிறோம். இதுவே இந் நேர்காணலை அர்த்தமுள்ளதாக்குகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்து உள்ளும் புறமுமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு தமது பாணியில் பதிலளித்துள்ளார்கள். இனி அவர்களுடனான நேர்காணல்

கேள்வி: சமகால நிகழ்வு ஒன்றுடன் இந்நேர்காணலை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அண்மையில் எமது ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நல்ல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை நாம் ஒற்றையாக அணுக முடியாது. சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஒரு நாட்டிற்குள் நுழையும் குடிவரவுப் பிரச்சினை அல்ல இது. அந்தந்த நாடுகள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சினையை அந்த அடிப்படையிலேயே மட்டும் அணுகவும் தலைப்படுகின்றன.

இந்தப் பிரச்சினையின் பரிமாணமே வேறு என்பதை அவை புரிந்திருந்தும் அதை புரிய மறுக்கின்றன அல்லது புரியாதது மாதிரி நடக்க விரும்புகின்றன என்று சொல்லலாம். இவ்விரு நிகழ்வுகளின் கன பரிமாணத்தை நாம் கால இட வெளி சூழலில் வைத்து ஆராய்வதும் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியற் போக்கை ஆரய்வதும் ஒன்றுதான். ஏனெனில் இரு ஆய்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இடைவெட்டி ஒன்றாகப் பயணம் செய்யக்கூடியவை.

உலகின் இரு வேறு கடற்பரப்புக்களில் நடந்து கொண்டிருக்கிற பிரச்சினையாக இருந்த போதும் பிரச்சினையின் மையம் ஒன்றுதான். நீங்கள் உங்கள் கேள்வியில் இரு நிகழ்வுகளையும் இணைத்ததிலிருந்தே அதன் ஒற்றுமையை புரிந்து கொளள்ளலாம்.

ஆச்சரியப்படும் வகையில் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் வகையிலும் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சில ஊடகங்களாலும் சில அரச அதிகாரிகளினாலும் சட்ட விரோத குடியேற்றம் என்ற பதத்துடன் மேலதிகமாக “பயங்கரவாதிகள்” என்ற பதமும் சேர்த்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினையை பன்மைத்தன்மையாக்குகிறது.

ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட்பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற்போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லாதளவிற்கு சில வேறுபட்ட கூறுகளை கொண்டுள்ளது.
அதில் முக்கியமானது, “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவடைந்து விட்டது” என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிற ஒரு சூழலில் முன்னரிலும் பார்க்க அதிகளவிலானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு.

இந்த செய்தியின் பின்னணியில் பல தெளிவான உண்மைகள் புதைந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டது என்ற சிறீலங்காவின் செய்தி செமத்தியாக அடிவாங்குகிற இடம் இது. அத்தோடு அந்தப் போரை அது எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தது என்ற உண்மையும் சேர்ந்து உறைக்கிற தளமும் இதுதான்.

யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.

ஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையை இரு வேறுகடற்பரப்புக்களில் நின்று உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது.

ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு.

அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செய்றபாடாகவும் இது இருக்கிறது. யார் சொன்னது போராடும் இனம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டால் அது அடங்கிவிடும் அல்லது ஓய்ந்து விடும் என்று.

தன்னையறிமாலேயே அது தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கும். அதற்கு சாட்சிதான் மேற்படி நிகழ்வுகள். அவர்கள் தண்ணீரில் மிதந்தபடியே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் இதன் பின்னணிக்குள் இன்னும் ஆழமாகப் போவோம். ஏனெனில் இதன் பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் புதைந்திருக்கிறது.

முன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம், மொழி, பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.

அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.

சிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின்; அடிப்டையில் இப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.

ஏனெனில் நாம் முன்பே குறிப்பிட்டது போல் முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது.

இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள்.

எஞ்சியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற அடையாளத்துடன் இவர்களுக்கு சம்பந்தபட்ட நாடுகள் ஒரு கூட்டு அரசியல் தஞ்சத்தை வழங்க வேண்டும் என்று நாம் வீதியல்இறங்கி போராட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக; கனடா, அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள எமது மக்கள் உடனடியாக இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல்; தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்? அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்? இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது எச்சரிக்கையாவது செய்யப்பட்டார்களா? பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ஒரு போராளியையாவது விடுதலை செய்ததா?

அவ்வளவு ஏன், புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வேண்டும்.

அதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற நடைபெறுகிற தேசம் அது. சிறீலங்கா என்ற தேசத்தை பொறுத்து தமிழர்களுக்கு என்று தற்போது இருக்கிற அடையாளம் ஒன்று இனப்படுகொலைக்கு பலியானவர்கள் இரண்டு இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் மூன்று தாயகத்தில் இன்னமும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவர்கள்.

மொத்தத்தில் சிறீலங்கா என்ற தேசத்துடன் நாம் எமது தொடர்பை முற்றாகத் துண்டிக்க வேண்டும், இல்லையெனில் மீள முடியாத உளவியல் சிக்கலுக்குள் ஒரு இனம் முழுவதும் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக விபரிக்கிறோம். உங்கள் கேள்விக்கான பதில் என்ற அளவில் இதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.

நாம் இனி போராடவேண்டியது எதிரிகளுடன் அல்ல. இந்த மேற்குலகத்துடன்தான். ஜனநாயகம் பேசியே எம்மைக் கழுத்தறுத்தவர்கள் இவர்கள்தான். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்புக்கெதிராக நாம் எமது கண்டனங்களை வீதியில் இறங்கி பதிவு செய்தேயாக வேண்டும்.; ஏனெனில் உண்மையான போர்க்குற்றவாளி ஐநா பொதுச்செயலர் பான்கிமூன்தான். உலக மகா யுத்தங்களின் பிற்பாடு பிரதானமாக இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவதற்காக உலக அரசுகளின் ஏகமனதான அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்ட ஒரு பொது அமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்ததுடன் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதை எந்த வகையில் சேர்ப்பது.

இனம், மொழி, நிலம், பண்பாடு; என்ற அடிப்படையில் எம்மை எமது நிலத்தில் வாழ விடுமாறு நாம் இப்போது உரிமையுடன் கேட்கக்கூடிய ஒரே இடம் ஐநா பொதுச் செயலரின் வாசஸ்தலம்தான். இல்லையேல் ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் வாழக்கூடிய ஒரு இடத்தை நோக்கி ஒரு “கூட்டு அரசியல் தஞ்சத்தை” கோரி; நகரும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டியிருக்கும்.இது இந்த உலக ஒழுங்கின் சமநிலையில் ஒரு பெரும் தளம்பலை ஏற்படுத்தும் அபாயத்தை சுட்டிக்காட்டி நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

மூலம்
நன்றி ஈழம் செய்திகள்
http://www.eelamenews.com/?p=1711

புதன், 25 நவம்பர், 2009

பன்னூற்றாண்டுகளின் படிமக் கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ் செய்த காலப் பிரவாகமே! வாழிய பல்லாண்டு.


சுயத்தை ஒடுக்கிய
எங்கள் சூரியத் திருவே
வல்லமை சுரக்கும்
வீரப்பெரும் வரலாறே
தாயக உள்ளொளி பெருக்கும்
தர்மத்தின் உறுதியே
உலகனைத்துமான தமிழினத்தின்
வாழ்வேந்தி வனையும் வல்லமையே
பாடுகிறேன் ஒரு பல்லாண்டு.

பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப்
பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே
வல்லரச வியூகங்களை
வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே
இன்றுங்கள் பிறந்த நாள்
ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும்
அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே

ஈழத்திரு நிலத்தின்
ஆணி வேர் அமைதி காக்கும் அதி
சாதனைப் பொழுது இது,
அர்த்தமற்றுப் போகாது.
ஈழம் என்ற சொல்லுக்குள்
இணைபிரியாக் காவியமே
இலக்கென்ற வடிவுக்குள்
கலக்கமில்லா ஓவியமே
யாலம் உனை அழிக்காது
சத்தியத்தின் புதல்வரே
தேயு நிலை சில நாட்தான்
தீய்த்தெழும் நின் திடமே

ஆன்ம நின் மௌனமே
அவணியைப் பேச வைக்கும்
அன்னை கை விலங்குடைத்து
அழகு நகை பூண வைக்கும்.
மேன்மை நின் செயலென்று
மேதினியே மனந்திறக்கும்
மானிடத்தின் தெய்வனென
மகிழ்ந்து புகழ் விருந்தளிக்கும்.

செண்பகச் சிறகிடுக்கில்
சிறுத்தையின் சிரிப்பு எழும்
செந்நிறக் கொடி பறக்க
செவ்வாகை மலர் சொரியும்
ஈழமணித் திருநாட்டில்
இந்த நிலை வந்துதிக்கும்
இறைமையுள உன்னாட்சி
அனைத்துலகும் அறம் அணைக்கும்.

வைகறைக்கு வாழ்த்துரைக்க
வயது தேவையில்லை.
சொல்லாட்சி குறைந்திடினும்
சோதிப்பிழம்பிற்கு
பல்லாண்டு பாடுதற்குப் பஞ்சம் வராது.

வல்லமை ஒளிரும்
வரலாற்றுக்குப் பிறந்தநாள்
வாழ்த்தெடுத்து வாய் மொழிந்தேன்

ஐம்பத்து ஐந்தின் அகவை
அய்யனே நின்தன் வாழ்வில்
மங்கலம் பொங்கிப் பொழிய
மண்மகள் மகிழ்வில் விரிய
பண்புடை சொந்தம் குவிய
பாவலர் சந்தம் கவிய
பாரிடை ஈழம் ஆண்டு
வாழ்க நீ பல்லாண்டு.

செவ்வாய், 24 நவம்பர், 2009

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு (ரொரன்டோ) 22 - 11 - 2009

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு கடந்த 22ந்திகதி ஸ்காபுரோ எவரெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ரொரன்டோ, ஸ்காபுரோ, மிஸிஸாகா ஆகிய பகுதிகளில் வதியும் மாவீரர்களின் பெற்றோருக்கு முதன் மரியாதை வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களும், சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் மாவீரர்களுக்கு நினைவு வணக்கத்தைச் செய்து அம்மாவீரர்கள் பற்றியும் எடுத்தியம்பி அவர்களின் ஆன்மாக்கள் காட்டிய வழியிலிருந்து வழுவாமல் தாயக மீட்பை தொடர்வோம் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரொரன்டோ அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 150 ஆவது நாளும் முழக்கப் பேரணியும்












கனடா ரொரன்டோ நகரில் 360 யூனிவேர்சிற்ரி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்களால் நடாத்தப்பட்டுவரும் கவனயீர்ப்பு நிகழ்வு 19 - 9 - 2009 சனிக்கிழமை தொடர்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளை நிறைவு செய்தது. இந்தக்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளையொட்டி ரொரன்டோ மத்திய பகுதி வீதிகளில் முழக்கப்பேரணியும் இடம்பெற்றது. இப்பேரணியானது யூனிவேசிற்ரி வீதியின் பாதையோரமாக வலது புறமாக அணிவகுத்து கொலிச் வீதியின் பாதையோர நடைபாதையினூடாக யங் வீதியில் வலதுபுறமாக நகரும்போது அதிகரித்த மக்கள் தொகையினால் ரொரன்டோ காவற்றுறையினர் யங் வீதியின் வாகன போக்குவரத்தின் ஒரு பாதையை நிறுத்தி அதனூடே பேரணியை நகர்ந்து செல்ல உதவி வழங்கினர். யங் வீதியின் போக்குவரத்ததுப் பாதையில் நகர்ந்த பேரணி மீண்டும் ப்ரொன்ட் வீதியில் வலது புறமாகத் திரும்பி யூனிவேர்சிற்ரி அவெனியு வீதிக்கு வந்து ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தது. ரொரன்டோ நகர மத்தியில் விடுமுறை நாட்களின் சனநெரிசல் நிறைந்த நேரமான மாலை ஐந்தரை மணிக்கு ஆரம்பமாகிய இப்பேரணி 8 மணியளவில் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்து சிங்கள இனஅழிப்பில் பலியான மக்களுக்கும் போராளிகளுக்கும் சுடர்வணக்கம் செய்து நிறைவுற்றது. இத் தொடர் கவனயீர்ப்பு தாயகத்தில் வதைமுகாம்களுக்குள் வாடும் தமிழ் மக்களி மீள தத்தம் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும்வரை தொடர்ந்தும் தினசரி நடாத்தப்படும் என்று அறிவிப்போடு நிறைவுபெற்றது.

சனி, 19 செப்டம்பர், 2009

வரலாற்றுப் பதிவாகும் 150ஆம் நாள் கவனயீர்ப்பு (கனடா)







கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 149 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா


அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

150ஆம் நாளான 19 - 9 - 2009 சனிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வு நிகழும் எனவும் அத்தோடு மாலை ரொரன்டோ மத்திய பகுதியில் பேரணியும் இடம்பெறும் என்பதை தொடர்ந்து அங்கு இக்கவனயீர்ப்பை நடாத்திவரும் தன்னார்வத் தொண்டர்கள் அறிவித்தூள்ளார்கள்.

உறவுகளே தொடர்ந்து 150 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கவனயீர்ப்பு ஒரு வரலாற்றுப் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

எல்லாத்திக்கிலிருந்தும் யூதர்கள்போல் ஒன்றிணையவேண்டும் என்ற கருத்து வரும் அளவிற்கு சொல்கின்ற வாய்களோ எழுதுகோல்களோ செயலாற்றவில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்த தெருக்களில் கவனயீர்ப்புகள் செய்யும் மக்களைச் சோர்வடையச் செய்யும் உத்திகளுக்கு விலைபோகாமல் தொடர்ந்தும் எங்கள் மக்களின் அறவழிப்போராட்டங்கள் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுவதன் மூலமும் வதை முகாம்களுக்குள் வாடும் எம் மக்களை விடுவிக்க வெளிநாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு நெம்புகோலாக மாறலாம்.

இன்றைய திலீப நினைவு நாட்களின் தொடர்ச்சியில் நாமும் எல்லாத் திக்கிலும் எம்மக்களின் அவலவாழ்வை வெளிக் கொணர்வதே காலத்தின் தேவை.
பார்வையாளர்களாக, விமர்சகர்களாக இல்லாமல் புலம்பெயர் மக்கள் போராட்டங்களில் பங்காளிகளாக மாறுங்கள். மக்கள் சக்தி சாதித்தே தீரும்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு


விழுகை என்பது விதிப்படியும்
எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றொரு நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்
விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயின.

அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கின.

இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

இன்றைகள் மட்டுமேன்....
துருவ முனைகள் வரைக்கும்
உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!

பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்
முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!

ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்
சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..
கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கனடாவில் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாள்

கனடா ரொரன்டோ மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியூ வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாளாகத் தொடரும் கவனயீர்ப்பு தினசரி காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை நிகழ்ந்து சிங்களத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மெழுகுவர்த்தி ஏந்திய பிரார்த்தனை நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. காட்சிப்படுத்தல்கள் சில...







நாளாந்தம் காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு தொடர்ந்து நடைபெறும் என்பதை அக்கவனயீர்ப்பில் கலந்து கொள்ளும் மக்கள் அறிவித்துள்ளனர்.

கனடாவில் "உண்மையைப் பேசவிடு" ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்












'உண்மையைப் பேசவிடு' ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

கனடியத் தமிழர் சமூகமும் கனடிய மாணவர் சமூகமும் இணைந்து 'உண்மையைப் பேசவிடு" என்ற ஓர் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை 250 Front streetல் அமைந்துள்ள CBC ஊடக மையத்தின் முன்பாக செப்ரெம்பர் 4 ந்திகதியான இன்று மாலை 3 மணியிலிருந்து 8மணிவரை முன்னெடுத்திருந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் இவ் ஆர்ப்பாட்ட ஒன்று கூடலில் கலந்துகொண்டனர். எழுச்சியுடனும், கோபத்துடனும் மக்கள் உண்மைகளை உரத்துக் கூற ஊடகத்துறையினருக்கு அழைப்பு விடுத்ததுடன் சிறீலங்கா அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகத்தையும் விடுவிக்க ஊடகத்துறை சார்ந்தவர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். கனடிய தமிழர் சமூகமும், கனடிய மாணவர் சமூகமும் முன்னெடுத்த இந்நிகழ்வை மாணவர் சமுதாயமே மிக முனைப்புடன் நின்று முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மீண்டும் எழுச்சி பெறும் புலம்பெயர் தமிழினம்.(கனடா)










கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 128 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.
கடந்த 128 நாட்களாக தமிழீழத்தில் சிறீலங்கா அரசின் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்தைக் காக்கவும், வதைமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் 3 இலட்சம் தமிழ் மக்களை விடுவித்து அவரவர் வீடுகளில் மறுபடியும் மீளக் குடியமர்த்த ஆவன செய்யக் கோரியும், தமிழருக்கான உரிமைகளை நீதியான முறையில் கிடைப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை உதவக் கோரியும் தொடர்ந்து இக்கவனயீர்ப்பு நிகழ்த்தப்படுகிறது.
நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

ஓகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை, இக்கவனயீர்ப்பு நிகழ்வானது 500இற்கு மேற்பட்ட மக்களுடன் மாலை 8 மணிக்கு ரொரன்டோ மாநகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக நகர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக யூனிவேர்சிற்றி அவெனியுவில் ஆரம்பித்த ஊர்வல நகர்வு கொலிச் வீதியூடாக யங் வீதியில் பயணித்து, குயின் வீதியில் வலது புறமாகத்திரும்பி யூனிவேர்சிற்றி அவெனியு வீதியை வந்தடைந்து சிறீலங்கா சிங்கள இனவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்து நிறைவு பெற்றது. நாளாந்தம் தொடரும் இக்கவனயீர்ப்பில் பிற இனத்தவர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. காலவரையின்றி இப்போராட்டம் தொடர்கிறது. சமீப காலமாக இப்போராட்டம் கூர்ப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான்




படுக்கையில் கிடந்தபடி
பாதை கேட்காதே
எழு….. உடல் முறித்து,
பத்தடி நட.
பாதை தெரியும்.
குப்புறக் கிடந்தால்
சுவாசமே சுமைதான்.

திரும்பிப் பார்.
விடுதலைக்காக கடந்த
தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்
பார்வையில் புலப்படும்.
தணற்காடுகளில் தீய்ந்தபோது
நெஞ்சம் வேகியது
சதுப்பு நிலங்களில் புதைந்தபோது
சலனம் ஆடியது.
மீள எழவில்லையா?

களத்திலேயே மீண்டெழுந்த
உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?
போராட்டக்களம் மாறியிருக்கிறது.
இப்போது சூறாவளி அவ்வளவே.

ஒட்டுமொத்த இன அழிப்பை
உலகம் கணக்கெடுக்கிறது.
துயர் கொல்லுதென்று
நீ முடங்கிவிட்டால்
இழப்புகள் கூட
மௌனித்துப் போகும்.

அழுவதாகிலும்...
அம்பலத்தில் நின்று அழு.
இது உனக்கு மட்டுமான வலியல்ல
நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.

நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.
எத்தனை பெரிய துயரில் இருக்க
இரக்கமில்லாமல் எழுதுகிறாய்
இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.

முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?
முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.
உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்
பெருகும் துயர் தீர்க்கப்
போராடுவது எப்படி?

விழி நீரை விரட்டு.
வேதனையை உரமாக்கு.
எழு தீயில் ஒளியேற்று.
ஓர்மத்தை நிறமாக்கு.
உயிருக்கு ஆணையிடு.
இவ்வளவும் போதும்.
உணர்வாய். நீயே வழிகாட்டி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.



கண்ணெதிரே கலையுமா கனவு?
மண்ணெனவே உதிருமா மனது?
நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்
ஒப்பேற முன்னரே உருகியா போகும்?
இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட
மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?

இது காலச்சுழி
சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.
சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.
தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.
மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.
மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.
உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.
ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்
முக்காற்சுற்று முடித்துவிட்டது.
சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு
பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.
காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.

நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.
மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை
முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.
ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு
உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.
வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.

என்ன இருக்கிறது?
எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.
உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.
அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.
அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.
உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்
உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.
கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.

மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.
புலத்திற்குள் பொருந்திக் கொள்.
புலன் தெளிவுறு.
உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு
எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.
கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.
ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.
ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்
பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.
அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.
அழிவுற்றுப் போகாது.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.
என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்
கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.
விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,
மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.
புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்
கூர் உனை பொசுக்கும்.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!
உன்னை இனி நானே பாடுவேன்.
அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த
என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை
உன்னை இனி நானே பாடுவேன்.