வியாழன், 17 மே, 2007

சாலக்கட்டமைப்பின் சீர்வலு


புலத்திடை உறவெனும்
வலிமையைக் காத்தவன்.
களத்திடை ஆடியே காய்த்து உரம்பெற்றவன்
புலத்திடை வந்து புத்துணர்வு ஊட்டியோன்
கலையெனும் அழகுடன் கதிரொளி வீசியோன்
காலனைப் பற்றிக் கரைந்தது எப்படி?
மாதம் ஒன்று மந்தமாய் ஆனது.

பாதைகள் வகுத்தவன் பயணப்பட்டது – எம்
காதடியில் இன்னும் கனத்துக் கிடக்கிறது.
ஆளுமை கொண்ட அறிவொளி மைந்தனே!
நீள நெடும் பயணம் நிறைவுகாணும் வேளையிலே
காலக்கரை பற்றி கண்மறைந்து போனதென்ன?
ஆழச் சுழியோடி அகிலத்தின் திசையெங்கும்

சீலப் பணியாற்றி சிந்தைகளை வென்றவனே!
பாலமிட்டுப் பற்பலரை பக்குவமாய்ப் பண்படுத்தி
சாலக்கட்டமைப்பில் சீர்வலுவாய் சேர்த்தவனே!- உனை
ஓலமிட்டு ஒளி சிதறும் கந்தகக் காவாலி
மாளவைத்த கதை மறையாமல் உயிர்க்கிறது.
கலையழகா!,

வீணாகப் போனவன் வந்துன்னை
விரைந்து அள்ளிப் போய்விட்டான்.
காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களென
எதிர்காலம் அறியாமல் ஏதேதோ பேசினோமே..
காலன் வந்துன்னைக் கடத்திப் போனானே
நான் இப்போது கட்புலன் அறியாக்
காற்றுக்குள் உனைத் தேடுகிறேன்.
காலனை ஒரு முறை என்

கண்ணெதிரே அழைத்துவா!
அவன் குரல்வளையைக் கடித்து
கோமாவில் போட குமுறுகிறது
என்னுள் மாபெரும் ஆத்திரம்.
அகிலத்தின் புரையான
ஆணவஅரசெல்லாம் எம்
அன்னையவள் ஈழமண்ணை
அலங்கோலப் படுத்துகையில்
உலகெலாம் பரவிய உறவுக் கொடிகளை
திரட்யெடுத்து திண்மையூட்டிய
உன்னையவன் பறித்தது
உலக மகா பாதகம்.
“கவிஞர்கள் மகாப் பொல்லாதவர்களோ?”

எக்கருத்தால் என்னிடத்தில்
இக்கணை தொடுத்தாய் அறிகிலேன்.
பொல்லாத்தன்மை கூடப்பிறப்பெடுத்து
வருவதில்லை வாழ்வுரிமை மறுக்கப்படும்
வல்லூறுகளுக்கு மத்தியிலே
வலிப்பட்டு, வதைபட்டு வாழும் எச்சீவனும்
பொல்லா முகம் கொண்ட
போர்ப்புலியாய் மாறும் என
இன்றில்லா உந்தனுக்கா புரியாது?
விழவிழ எழுகின்ற வேதத்திற்கு உரியவனே,

வெல்லும் தமிழீழத் தாகத்தை உடையோனே,
காற்றிலாடும் விழுதனைத்தும்
வேர்மடியில் பிணைத்ததுடன்
ஆற்றியது போதுமென்றா
கூற்றுவன் பின் சென்றாய்?
மாற்றமது கூறும் காலக்கருவாகி
மண்மீட்பில் புலம்பெயர்வேர்களின்
பலம் ஏற்றி பயணிக்கத் தூண்டி,
ஓய்வின்றி மீதி வழிபயணிக்கும்
பாதை காட்டி சென்றவனே,
ஓயமாட்டோம் - இனி எவ்
இன்னல் வரினும் சாயமாட்டோம்.
மாயமான் எம்மிடையே மருண்டோடும் காலமிது.
தாயக மடிசாய்ந்த தளராத தோழனே!
ஓய்வெடுத்து நீ உறங்கு.
உன் உறுதி எங்களிடம் உயிர்க்கும்.


கருத்துகள் இல்லை: