செவ்வாய், 23 ஜனவரி, 2007

மர்ம மயானம்.

எங்கள் எட்டுப்பேர்களுக்குள்ளும் இன்னும் கருத்தாடல்களும், கலக்கங்களும், கடந்த கால ஏக்கங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருந்தன. அந்த வேர் முட்டிய இலுப்பை மரம் நூற்றாண்டு தாண்டிய முதிர்ச்சியுற்றிருந்தாலும் அந்தக் கானல் பிரதேசத்தில் வேரூன்றிய காரணத்தால் வளர்ச்சியில் செழுமை குன்றி குற்றவாளியைப்போல் குறுகி நின்றது. அதன் அடிப்பரப்பு வேர்த்திட்டுக்களில் அமர்ந்தபடி அலறலாய் வெளிவந்த எங்கள் புலம்பல்களை இந்த மரம் எத்தனையோ தடவைகள் கேட்டாயிற்று. இருந்தாலும் மனதிற்குள் வெம்பியபடி இன்னும் மௌனமாகவே நிற்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. ஏய் மரமே! உனக்குக் கூடவா எங்களைத் தெரியவில்லை?....... எத்தனைபேர் இவ்வழியால் வருகிறார்கள், போகிறார்கள். எங்கள் இருப்பை அவதானிக்க அவகாசம் இல்லாது அவரவர் அவசரம் அவரவருக்கு…. எண்ணங்களுக்குள் அலைமோதியபடி அந்தச் சாலையோரம் என் அவதானிப்புக்கள்…
தூரத்தில் ஏதோ பொருட்கள் சுமந்தபடி ஒரு மாட்டுவண்டி!காளை மாடுகளின் வாய்களின் ஓரங்களில் நுரை கக்கியபடி அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஒலி லயத்திற்கு ஏற்றபடி அவை நடைபோட்டு வந்து கொண்டிருந்தன. கானல் வெயிலில் கண்களைக் கூசியபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கிழவனின் கண்களில் ஒரு மலர்ச்சி. எனக்குத் தெரியும் இந்த இலுப்பைமர நிழல் அவனை வசீகரித்து விட்டது. நிட்சயம் அவன் இந்த நிழலில் இளைப்பாறுவான். எனக்குள் மின்னல் வெட்டியது. எப்படியும் கிழவனை நம்பக்கம் ஈர்க்க வேண்டும். சுற்றவர என்னைப் புரிந்து கொண்ட வேகத்தில் எண்திசைக்கும் பார்வைகள் படர்ந்தன. அதோ கிழவன் அண்மித்துவிட்டான். இலுப்பையடியில் எங்களைப் பார்த்ததும் காளைகள் இரண்டும் கண்களில் மிரட்சியுற்றன. லயத்தோடு நடையிட்ட அவற்றின் கால்கள் நிலை தடுமாறின. கிழவனின் கையில் இருந்த மூக்கணாங்கயிறு வலிகொடுக்கக் காளைகள் ஒடுங்கின. இலுப்பை வேரடியில்… இதோ கிழவன் இறங்கி விட்டான். நாங்கள் துணிந்து அவனருகே சென்று சுற்றிவர நின்றோம். அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தானே தவிர, எங்களைக் கவனிக்கவேயில்லை. மதிய வெயிலின் ஒருவித நிசப்தம் அவனை பாதித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் காளை மாடுகள் மட்டும் மருட்சியோடு எங்களைப்பார்த்துத் தீனமாக நலிவோடு அழுதன. அது கிழவனுக்கு எரிச்சலை ஊட்டியிருக்கவேணும் “த்தா…! சும்மாயிரு!!” என்று அதட்டிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டான். “விசுக்” கென்று அந்தப்புதர்பக்கமிருந்து வெளவால் ஒன்று கிறீச்சிட்டுப் பறந்தது. திடுக்கிட்ட கிழவன் பார்வையை அந்தப்பக்கம் திருப்பினான். ஏதேச்சையாக எதையோ…….. எதையோ மிக உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான். எங்களுக்குள் மலர்ச்சி….. அமைதியாக இலுப்பை வேர் முட்டியில் கிழவனைப்பார்த்தபடி அமர்ந்தோம். கிழவன் கண்ணுக்கு ஏதோ உறுத்தியிருக்க வேண்டும் அங்கேயே உற்று உற்றுப் பார்த்தான்.
அந்த நேரம் தூரத்தில் இரைச்சல்…. புழுதியைக் கிளப்பியபடி இராணுவ வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. இரைச்சலின் அடையாளத்தை உணர்ந்த கிழவன் அவசரமாக காளைகளை உசார்ப்படுத்தி வண்டியில் ஏறிக் கொண்டான். இதற்குள் இராணுவ வாகனங்கள் கிழவனைத் தாண்டி வேகத்தைக் குறைத்தன. முதலாவது ஜீப்பில் வந்த சிப்பாய் “அடோ…அடோ இங்கி..என்னெ செய்றே!” என்று விரட்டியபடி ஜீப்பைவிட்டுக் குதித்தான். கிழவனும் நிழலுக்கு ஒதுங்கியதாக பயத்தோடு பிதற்ற ஆரம்பித்தான். மூன்றாம் வாகனத்தில் இருந்து மிடுக்கோடு ஒரு குரல் சிப்பாயை அதட்டச் சிப்பாய் தனது வாகனத்தில் ஓடிப்போய் ஏறிக்கொண்டான். மீண்டும் வாகன அணி நகர்ந்தது.
ஆ….. அதோ அந்த கடைசி வாகனத்தில் போறான்.. அவன்தான் நான் கூவிக்கொண்டு பறந்தேன். என்னோடு வேகமாக மற்றைய ஏழ்வரும் பறந்து வர அந்தச் சிப்பாயின் அருகே சென்றோம்.
அந்தச்சிப்பாய் அவன் பார்வை கிழவன் நோக்கிய அதே புதரைக் கிலியோடு நோக்கியபடி இருக்க அந்த இராணுவ வாகன அணி நகர்ந்து சென்றது. எங்கள் எண்மரால் எதுவும் செய்ய இயலவில்லை… திருப்பிப்பறந்து இலுப்பையடிக்கு வந்தோம். கிழவனும் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தான்.
ஏமாற்றத்துடன் எங்கள் காத்திருப்பு அடுத்த வரவுக்காக ஏங்கியபடி….. அந்தப் புதர்ப்பக்கம் இன்னும் எனது கையோடு இணைந்தபடி என் கடிகாரம் ஒளிகொடுத்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: